| dc.description.abstract |
பண்டைக்காலம் தொட்டு இன்றுவரை பெண்களின் துன்பியல் நிலையானது பல்வேறு
ஆய்வாளர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இலக்கியங்களில் பெண்கள் பற்றியும் அவர்களின் துன்பநிலை சார்ந்தும் எழுதப்பட்டுள்ளன. சங்க கால இலக்கியம் முதல் இன்றுவரை பெண்களின் துன்பியல் பேசப்படாத மொழிகளே இல்லை. போருக்குப் பின்னராக ஒரு தமிழ்ச்சமூகத்தில் பெண்களின் துன்பம் எவ்வாறு உள்ளதென்பது தொடர்பாக வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமாக எழுதப்பட்டிருந்த போதிலும், இலக்கியங்களில் கூறப்பட்ட பெண்களின் துன்ப நிலையையும், நடைமுறையில் ஒரு போர் முடிந்த சமூகத்தில் பெண்களின் துன்ப நிலைமையும், ஒப்பீடு செய்து, பெண்களுக்கூடாக, அவர்களின் நிலை ஆய்வு செய்யப்படவில்லை. இவ் ஆய்வு இடைவெளியைக் குறைப்பதற்காக இவ் ஆய்வானது போருக்குப் பின்னரான வடக்குத்தமிழ்ச்சமூகத்திலிருந்து நோக்கமுறை மாதிரி எடுப்பினை அடிப்படையாகக் கொண்டு 25 பெண்களிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு, உட்பொருள் குறியீடு பகுப்பாய்வின் மூலம் 10 வகையான பெண்களின் துன்பியல் நிலைமையைக் கண்டுபிடித்து இலக்கியங்களில் கூறப்பட்ட பெண்களின் துன்பநிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவின் படி
இலக்கியங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கூறப்பட்ட துன்பநிலை இன்னும்
தீர்ந்தபாடில்லை என்பதே பெண்களின் கருத்தாகவும், கல்வி வளர்ச்சி, சுயகல்வி, சுதந்திரக்கல்வி என்பதில் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பினும் குடும்பத்தை தனித்துச் சுமத்தல், குடும்பத்தில் நிலவும், பெண்ணடிமை நிலை, போதைக்கு அடிமையான குடும்ப அங்கத்தவரால் துன்பம், இறந்தவருக்காகவும், காணாமல் போனோருக்காகவும் வருந்துதல், பாலியல் துஸ்பிரயோகம், வறுமை, நோய்களின் தாக்கம், குழந்தைகளின்மை, சீதணப் பிரச்சனைகள், சில வேலைத்தலங்களில் பெண்சமத்துவமின்மை போன்றவற்றால் உருவாகியுள்ள பல பிரச்சனைகளைத் துன்பங்களாக அனுபவித்துக் கொண்டிருப்பதாகவும் போருக்குப் பின்னர்த் தனித்து வாழும் பெண்களிடையே காணாமல் போனோரைத் தேடுதல், மதுபாவனைக்கு அடிமையான கணவர் என பல்வேறு துன்பங்கள் காணப்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எப்போதும் மனச்சுமையோடும், துன்பங்களோடும் வாழ்ந்து கொண்டு அதனைத் தீர்த்துக் கொள்ளும் பெண்கள் ஒரு புறமும் நாகரிக மோகத்திற்கு அடிமையாகப் பண்பாடு, சமூக விழுமியங்களைக் கருத்தில் கொள்ளாது மேலைத்தேய நாகரிக வளர்ச்சிக்கு அடிமையாகிய பெண்கள் மறுபுறமாகவும் போர் முடிந்த தமிழ்ச் சமூகத்தில் காணப்படுகின்றன. ஆய்வு முடிவின் படி பெண்களின் உள்ளார்ந்த நிலையினை வெளிக்கொணர்ந்து துன்பியல் நிலையினை சீரமைப்பதற்குப் பல்வேறு செயற்பாடுகளைப் பெண்கள் சார்ந்த அமைப்புக்கள் முன்னெடுக்க வேண்டும் என்பது இவ் ஆய்வின் வேண்டுகோளாகும். |
en_US |