| dc.description.abstract |
கல்வி ஒரு நாட்டின் முக்கிய அங்கமாகவும், சமூக பொருளாதார முன்னேற்றத்தின்
அடித்தளமாகவும் விளங்குகிறது. கல்வி முறையின் தரமானது ஆசிரியர்களின்
தரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைப்பில் ஆசிரியர் தரம் மற்றும்
அவர்களின் பாட நிபுணத்துவம் மாணவர்களின் கல்வி அடைவில் முக்கிய
பங்காற்றுகின்றன. இந்த ஆய்வானது ஆசிரியர்களின் நியமனப் பாடம் மற்றும்
கற்பிக்கும் பாடத்திற்கிடையிலான வேறுபாடு மாணவர்களின் கற்றல் அடைவில்
ஏற்படுத்தும் தாக்கத்தை ஆராய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களை ஆய்வுப் பிரதேசமாகக் கொண்டு அளவறி
முறையில் அமைந்த குறுக்கு வெட்டு அளவை நிலை ஆய்வாக
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இங்கு கணிதம் மற்றும் விஞ்ஞானம் கற்பிக்கும் 193
ஆசிரியர்கள் ஆய்வு குடித்தொகையாக எடுக்கப்பட்டு, ஆய்வுக்குரிய மாதிரியானது
எளிய படை கொண்ட விகிதாசார எழுமாற்று நுட்ப மாதிரி எடுப்பு முறை மூலம்
மேற்கொள்ளப்பட்டது. மாதிரிக்குரிய பருமனை (145 ஆசிரியர்கள்) தீர்மானிக்க கிரேசி
மோகன் அட்டவணை பயன்படுத்தப்பட்டது. தரவுச் சேகரிப்பிற்காக கட்டமைக்கப்பட்ட
மூடிய வகை வினாக்கொத்தும், மாணவர்களின் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்
பரீட்சை பெறுபேறுகளும் பயன்படுத்தப்பட்டன. வினாக்கொத்தின் நம்பகமானது
Cronbach’s alpha குணகத்தைப் (α = .96) பயன்படுத்தி உறுதிப்படுத்தப்பட்டது.
சேகரிக்கப்பட்ட தரவுகள் விபரணப்புள்ளி விபரவியல் நுட்பங்களான மீடிறன்,
இடைப்பெறுமானம், சதவீதம் மற்றும் அனுமானப் புள்ளி; விபரவியல் நுட்பங்களான
Kolmogorov-Smirnov மற்றும் Shapiro-Wilk பரிசோதனைகள், மற்றும் Independent
Sample t-test என்பவற்றைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வின்
முடிவுகள், நியமனப் பாடம் கற்பிக்கின்ற பாடமாக காணப்படும் ஆசிரியர்களிடம் கற்ற
மாணவர்கள் (M = 73.09), நியமனப் பாடமும் கற்பிக்கின்ற பாடமும் சமமல்லாத
ஆசிரியர்களிடம் கற்ற மாணவர்களை (M = 45.34) விட குறிப்பிடத்தக்க அளவில்
உயர்ந்த தேசிய தேர்வு சாதனையை வெளிப்படுத்துகின்றனர். மேலும், ஆசிரியர்களின்
புலக்காட்சியில் மதிப்பிடப்படும் மாணவர் கற்றல் அடைவிற்கும் தேசிய பரீட்சை
முடிவுகளிற்கும் இடையே குறிப்பிடத்தக்க தொடர்பு இல்லையென்பதும்
கண்டறியப்பட்டது(r = .06, p > .05). இது, கற்றல் அடைவினை மதிப்பிடும்
முறைகளில் வேறுபாடுகள் உள்ளதைக் காட்டுகிறது. எனவே ஆசிரியர்களின்
புலக்காட்சியில் மதிப்பிடப்படும் மாணவர் கற்றல் அடைவும் தேசிய பரீட்சை கற்றல்
அடைவும் வெவ்வேறு பரிமாணங்களை அளவிடுகின்றன. இந்த ஆய்வு, ஆசிரியர்களின்
உள்ளடக்க அறிவு, கற்பித்தல் அறிவு, பாடத்திட்டத் திட்டமிடல், மாணவர் ஈடுபாடு,
கற்பித்தல் தன்னம்பிக்கை மற்றும் மதிப்பீட்டு நடைமுறைகள் இணைந்து செயல்படும்
போது மட்டுமே மாணவர்களின் கற்றல் அடைவு மேம்படும் என்பதை வலியுறுத்துகிறது. |
en_US |