| dc.description.abstract |
21ஆம் நூற்றாண்டில் சமூக வலைத்தளங்கள் கல்வியியல் வாய்ப்புகளை
வழங்குவதோடு, கவனச்சிதறல், நேரமுகாமைத்துவக் குறைபாடு, கல்விச் சாதனைக்
குறைவு, உடல் மற்றும் உளச்சோர்வு போன்ற சவால்களையும் உருவாக்குகின்றன.
இதற்கமைய இந்த ஆய்வு, சமூகவலைத்தளப் பாவனை கற்றலில் ஏற்படுத்தும் தாக்கம்
என்னும் தலைப்பில் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வின் முக்கிய நோக்கம், கொழும்பு
தெற்குக் கோட்ட தமிழ்மொழிமூல மாகாணப் பாடசாலைகளில் சிரேஷ்ட
இடைநிலைப்பிரிவு மாணவர்களின் சமூக வலைத்தளப் பாவனை கற்றலில் ஏற்படுத்தும்
தாக்கத்தைக் கண்டறிவதாகும். இவ்ஆய்வானது விவரண ஆராய்ச்சி வடிவமாகவும்
கலப்பு அணுகுமுறையாகவும் கொழும்பு தெற்குக் கோட்ட தமிழ்மொழிமூல மாகாணப்
பாடசாலைகள் நான்கும் நோக்கமுறை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டன.
அங்குள்ள சிரேஷ்ட இடைநிலைப் பிரிவு மாணவர்கள் 200 பேரும் படைமுறை
எழுமாற்று மாதிரி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆய்வுக் குடித்தொகையாகவும்,
குடித்தொகைப் பருமன் கிறென்சி மோகன் அட்டவணைக்கமைய தெரிவு செய்யப்பட்ட
132 மாணவர்களை ஆய்வு மாதிரியாகவும் கொண்டு வினாக்கொத்து மூலம் முதன்மைத்
தரவுகளாகவும் 20 பெற்றோர்களுக்கான நேர்காணல், முதலாம், இரண்டாந் தவணைப்
பரீட்சைப் புள்ளி ஆவணங்கள் என்பன துணைத்தரவுகளாகவும் சேகரிக்கப்பட்டன.
அத்தரவுகள் SPSS மென்பொருள் மூலம் விபரண புள்ளிவிபரவியல் முறையிலும்
கருப்பொருள் பகுப்பாய்வு முறையிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு சதவீதப் பகுப்பாய்வு,
பியர்சனின் இணைவுக் குணகம் வழியாக தரவுகளுக்கு விளக்கமளி;க்கப்பட்டது.
ஆய்வின் முக்கிய முடிவுகளாக, 18.2% மாணவர்கள் சமூக வலைத்தளங்களை
வாரத்தில் ஆறு நாட்களில் பயன்படுத்துகின்றனர். அவற்றுள் Facebook 15.2%,
YouTube 90.2%, TikTok 45.5%, Instagram 49.2% போன்ற தளங்கள்
பயன்படுத்தப்படுகின்றன. கற்றல் நேரத்தின் குறைவு, கவனச்சிதறல், மனச்சோர்வு,
தூக்கமின்மை, கல்விச் சாதனையில் வீழ்ச்சி போன்ற எதிரான விளைவுகள் கற்றல்
செயற்பாட்டில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. பியர்சனின் இணைவுக் குணகம் (r=
.24) மூலம், சமூக வலைத்தளப் பாவனைக்கும் கல்விச் சாதனைக்குமிடையே மிகக்
குறைந்தளவில் நேர்த்தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், சில
மாணவர்கள் சமூக வலைத்தளங்களை கல்வி நோக்கத்திற்காகப் பயன்படுத்தி, குழுக்
கற்றல், தகவல்களைத் தேடல் மற்றும் கல்வி வீடியோக்களைப் பயன்படுத்தும்
வழக்கத்தையும் வெளிப்படுத்தினர். சமூகவலைத்தளங்களை சீரான வழிநடத்தலுடனும்
கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்தினால் கல்வி மேம்பாட்டுக்கான கருவியாக மாற்றமுடியும்;
இல்லையேல் கல்விச் சாதனையைப் பாதிக்கும். எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள்,
பெற்றோர் மற்றும் கல்வி நிர்வாகிகள் சமூக வலைத்தளங்களின் பயனுள்ள கல்விசார்
ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க வேண்டும் என்பது இவ்வாய்வின் பரிந்துரையாகும். |
en_US |