Abstract:
கிறிஸ்தவ சமயம் மறுவுலகு சார்ந்ததாக மட்டுமல்லாமல் இவ்வுலகில் மானிடர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகொடுக்கும் சமயமாக உள்ளது. கிறிஸ்தவ சமயமும் அந்நியமாதலும் என்னும் தலைப்பில் தகவலைப் பெற்றுக் கொள்ள நூல்கள், சஞ்சிகைகளைப் பயன்படுத்தித் தரவுகளைப் பெற்றுக்கொள்வதால் வரலாற்றுமுறை, உய்த்துணர் முறை, தொகுத்தறிவு முறையினையும் பயன்படுத்தி தரவுகள் பெறப்பட்டுள்ளன. கிறிஸ்தவ சமயத்தில் மத்திய காலத்தில் காணப்பட்ட இறையியல் பண்புகள் மானிடர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதாக அமையவில்லை. சமயத்தால் மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட ஆதிக்க செயல்கள் மறுமலர்ச்சிக்கும் புரட்சிக்கும் வழிவகுத்தன. மறுமலர்ச்சியினால் கிறிஸ்தவத்தில் உண்டான செழுமை மானிட விடுதலைக்கு பங்காற்றியது போன்றன ஆய்வின் கருதுகோள்களாக காணப்படுகின்றன. கிறிஸ்தவ சமயம் மறுவுலகு பற்றி போதிக்கும் சமயம் அல்ல மாறாக இவ்வுலகில் மானிடர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கொடுக்கும் வகையில் ஈடுபாட்டுடன் செயற்படும் ஒரு சமயம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. கிறிஸ்தவமும் அதன் ஆரம்பகால மக்கள் மையத்தன்மையும் என்ற தலைப்பின் ஊடாக நோக்கப்படுகின்றது. இதில் இயேசுவின் பணிவாழ்வு, இயேசுவின் போதனைப் பணிவாழ்வை தொடர்ந்தாற்றிய தொடக்கத் திரு அவையினரின் வாழ்வு எவ்வாறு மக்களின் வாழ்வியலோடு இணைந்திருந்தது போன்ற கருத்தியல்கள் வலியுறுத்தப்படுகின்றது. அந்நியமாதல் என்றால் என்ன? என்பதுடன் கார்ல்மாக்ஸ் பார்வையில் அந்நியமாதல் பற்றிய கருத்தியல்கள் என்பவற்றுடன், கிறிஸ்தவ சமயம் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட மக்கள் மைய நிலையிலிருந்து எவ்வாறு அந்நியமாகியது போன்ற கருத்தியல்கள் விளக்கப்படுகின்றன. மத்திய காலத்தில் மக்கள் வாழ்விலிருந்து அந்நியமாகிய கிறிஸ்தவம் மறுமலர்ச்சிச் சிந்தனைகளால் எவ்வாறு தன்னைப் புதுப்பித்து மக்களின் பிரச்சினையை தன் பிரச்சினையாக கருதி இயேசுவின் போதனைகளுக்கு எவ்வாறு செயல்வடிவம் கொடுத்தது போன்ற கருத்தியல்கள் கருத்தாடப்படுகின்றன. இயேசுவின் போதனைகள் ஒவ்வொன்றும் மக்களின் வாழ்வியலை சார்ந்ததாகவே காணப்பட்டிருந்தது. இயேசுவின் வாழ்வைத் தொடர்ந்து பின்பற்றிய தொடக்கத் திரு அவையும், மக்கள் மையப்பட்ட திரு அவையாக காணப்பட்டது. கிறிஸ்தவ சமயம் சுதந்திரம் பெற்று உரோமின் அரச சமயமாக பிரகடனப் படுத்தப்பட்டதின் பின்னர் கிறிஸ்தவ வாழ்க்கை முறையில் சீர்குலைவுகள் ஏற்பட்டன. மக்கள் எதிர்கொள்ளும் இடர்களுக்கு கிறிஸ்தவம் தன் பதிலை முன்வைக்காமல் சுதந்திரகாலத்தில் மக்கள் மையநிலையிலிருந்து விலகி நிறுவன அமைப்பில் தன்னை வளப்படுத்திக் கொண்டது. மக்கள் மத்தியில் உருவான மறுமலர்ச்சிச் சிந்தனையினால் திரு அவை தன்னில் காணப்பட்ட குறைபாடுகளைக் களைந்து மக்கள் மைய மீள்பரிமாணத்துடன் செயற்பட்டது. மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளும் திரு அவையின் பிரச்சினைகளாக நோக்கப்பட்டது என்பது ஆய்வின் முடிவாகும். இவை ஆய்வின் மூலம் பெறப்பட்ட விடயங்களாகும்.