dc.description.abstract |
மிகத் தொன்மையான வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கிய வகைகளுக்கும் தனிச் சிறப்பு உண்டு. இச் சிற்றிலக்கிய வகைகளில் எளிமையும் இனிமையும் பொருந்திய இலக்கிய வடிவமாகப் 'பள்ளு' திகழ்கின்றது. இது வயல்களில் உழவுத் தொழில் புரியும் மக்களின் வாழ்க்கையைப் பாடுபொருளாகக் கொண்டமைந்துள்ளது. இவ்வாறு உழவுத் தொழிலில் ஈடுபட்ட பள்ளர், பள்ளியர்களின் வாழ்க்கையை ஒட்டிய கூத்து வகைகள், பாட்டும் தாளமும் இணைந்து அமையப்பெற்று, சாதாரண மக்களால் விரும்பிப் பாடப்பட்டு வந்துள்ளன. இதில் உள்ளடங்கும் ஆடல், பாடல் என்பவற்றில் மகிழ்ந்த புலவர்களின் சிந்தையில், 'அவற்றை இலக்கியமாகப் படைக்க வேண்டும்' என்று உதித்த உயரிய நோக்கும் ஆர்வமும் பள்ளுப் பிரபந்த இலக்கியங்களின் தோற்றத்துக்கு ஏதுவாய் அமைந்திருக்கலாம்.
உழவுத் தொழிலில் ஈடுபட்ட உழவர்கள், உழத்தியர்களின் வாழ்வில் நிகழப்பெற்ற சம்பவங்களை எளிமையாகவும் இனிமையாகவும் சுவைப்படவும் கூறுவது பள்ளுப் பிரபந்த இலக்கியத்தின் நோக்கமாகும். இரு மனைவியரையுடைய பள்ளன் நில உரிமையாளனான செல்வந்தனின் பண்ணையில் பரம்பரைப் பரம்பரையாக விவசாய வேலை செய்பவன். ஆயினும் இவன் மூத்தபள்ளியையும் விவசாய வேலைகளையும் கவனியாது, இளையபள்ளியிடம் மயங்கிக் கிடக்கின்றான். இதனை அறிந்த மூத்தபள்ளி பள்ளனைப் பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடுகிறாள். எனவே இது குறித்து கோபம் கொண்ட பண்ணைக்காரன் பள்ளனைத் தண்டிக்கின்றான். ஆயினும் தண்டனைப்பெற்ற பள்ளன் வருந்துவதைக் காணும் மூத்தபள்ளி மனம் வருந்திப் பள்ளனை மீட்கின்றாள். தொடர்ந்து பள்ளன் வயல் வேலையில் ஈடுபடுகிறான். சில நாட்களின் பின்னர் பயிர் நன்கு விளைகின்றது. ஆயினும் நெல் அளந்து கொடுப்பதில் நீதி காணப்படவில்லை என மூத்தபள்ளி முறையிடுகின்றாள். இதனால் மூத்தஇ இளைய பள்ளியரிடையே வாய்த்தர்க்கம் ஏற்படுகின்றது. இறுதியில் சமாதானம் அடைந்த இருவரும் பள்ளனுடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதுவே பள்ளுப் பிரபந்தங்களில் காணப்படும் பொதுவான கதை மரபு.
ஈழத்தில் தோன்றிய பள்ளுப் பிரபந்தங்களில் சிதைவின்றி முழுமையாகக் கிடைக்கப்பெற்ற ஞானப்பள்ளின் கதையமைப்பு பொதுவானப் பள்ளுப் பிரபந்தக் கதையமைப்பிலிருந்து சற்று வித்தியாசப்படுவது கருத்திற் கொள்ளத்தக்கது. ஞானப்பள்ளானது இயேசுக் கிறிஸ்துவின் புகழைப் பாடுவதையே மையப் பொருளாகக் கொண்டுள்ளது. இது மறையைப் பரப்பும் நோக்குடன் மறைசார்ந்த இறையியல், வரலாற்றுக் குறிப்புக்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றை எடுத்துரைக்கும் நோக்குடையதாக இந்நூலின் முயற்சி அமையப்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2013 ஆம் ஆண்டு முதுத்தத்துவமாணி பட்டத்திற்கென சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையிலுள்ள சில விடயங்கள் தவிர்க்கப்பட்டு, சமகால பாவனையிலுள்ள சொற்பதங்கள் இணைக்கப்பட்டு, உசாத்துணை நூல்களை வழங்கும் முறையியலில் சில மாற்றங்களையும் மேற்கொண்டு நூல் வடிவு பெறுகின்றது. இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் முதற்பகுதி 'பள்ளுப் பிரபந்தத்தின் தோற்றம் - வளர்ச்சி - பயன்பாடு' என்னும் தலைப்பில் பள்ளுப் பிரபந்தங்களின் தோற்றப்பின்னணி சார்ந்த விளக்கங்களை எடுத்துரைப்பதாக அமையப்பெற்றுள்ளது. இதன் இரண்டாவது பகுதி 'ஞானப்பள்ளுப் பிரபந்தத்தின் கட்டமைப்பு' தொடர்பாக ஆய்வு செய்துள்ளது. இதில் வரும் மூன்றாவதும் நான்காவதுமான பகுதிகள் ஞானப்பள்ளின் உள்ளடக்கத்தை வெளிக்கொண்டுவரும் நோக்குடன் முறையே 'ஞானப்பள்ளுப் பிரபந்தத்தில் இறையியல் கருத்துக்கள், ஞானப்பள்ளில் கத்தோலிக்க மறை சார்ந்த வரலாற்றுக் குறிப்புக்கள்' என்னும் தலைப்புக்களில் அமையப்பெற்று, அவற்றுடன் தொடர்புடைய விளக்கங்களை முன்வைத்து, வாசகர்களுக்கு அதன் புரிதலை எடுத்துரைத்துள்ளன. மேலும் ஞானப்பள்ளின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் நோக்குடன் இதன் ஐந்தாவது பகுதியானது 'ஒப்பியல் நோக்கில் ஞானப்பள்ளு' என்னும் தலைப்பில் ஈழத்தில் தோற்றம் பெற்ற கதிரைமலைப் பள்ளு, பறாளை விநாயகர் பள்ளு, தண்டிகைக் கனகராயன் பள்ளு ஆகியவற்றின் அமைப்புஇ உள்ளடக்கம், இலக்கியச் சிறப்புக்கள் என்பவற்றை ஒப்புநோக்கு அடிப்படையில் எடுத்துரைப்பதாக அமையப்பெற்றுள்ளது. |
en_US |