Abstract:
அளவைப் பிரமாணங்களைக் கையாண்டு பௌதிகவதீத உண்மைகளை வியாக்கியானப் படுத்தும் முறைமை இந்திய மெய்யியலில் மிக நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டு விளங்குகின்றது. குறிப்பாக சைவ சித்தாந்திகள் அதனைச் சிறப்பாக எடுத்தாண்டுள்ளனர். அதேபோல வைஷ்ணவ வேதாந்திகளும் பிரமாணங்களை எடுத்துக்காட்டி பௌதிகவதீத உண்மைகளை விளக்கியுள்ளனர். இவ்வாய்வானது சைவ சித்தாந்திகள் மற்றும் வைஷ்ணவ வேதாந்திகள் எவ்வாறு தத்தம் நியாயப்பாடுகளை முப்பொருள் தத்துவங்களை நிறுவிப்பதற்கு கையாண்டுள்ளனர் என்பதனை எடுத்துக்காட்ட விளைகின்றது. அத்தோடு சைவசித்தாந்திகள் எவ்வாறு தமக்கென தனித்துவமான பிரமாணங்களைக் கையாண்டு அவற்றை விளக்கியுள்ளனர், வைஷ்ணவ வேதாந்திகள் எவ்வாறு தமது கருத்துக்களை பிரமாணங்களின் வழி எடுத்தாண்டுள்ளனர் என்பதனை வெளிக் கொண்டு வருகின்றது. அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டியுள்ள மூலநூல்கள், இலக்கியங்கள், உரைநூல்கள் அவற்றின் மொழிபெயர்ப்புக்கள், போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. வேதாந்த நோக்கில் சைவ சித்தாந்தமும் வைஷ்ணவ வேதாந்தமும் பிரமாணங்களை கையாண்டுள்ள முறை இரு சமய தத்துவ முறைகள் பிரமாணங்களை கையாளுதல் எனும் ஒரு பொதுத்தளத்தில் ஒன்றுபட்டு பயணித்துள்ளன. எண்ணிக்கை அடிப்படையில் பிரமாணங்களை ஏற்றுக் கொள்வதில் இரு தத்துவ முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும் பொதுவாக பிரமாணங்களை அடிப்படையாகக் கொண்டே இரு தத்துவ முறைகளும் மெய்ப்பொருள் உண்மையை எடுத்தாண்டுள்ளன.