| dc.description.abstract |
இலங்கையில் தமிழ் ஊடகப்பரப்பில் கொழும்பை மையமாகக் கொண்ட ஊடகங்கள் ஒருபுறமிருக்க, வடமாகாணத்தை மையப்படுத்தியதாக பிராந்திய ஊடகப் பரப்பொன்றும் பல ஆண்டுகளாகவே வளர்ச்சி பெற்று வருகின்றது. இது தனக்கே உரித்தான சிறப்பியல்புகளையும் கொண்டிருக்கின்றது. கொழும்பை மையமாக வைத்திருக்கக்கூடிய தமிழ் ஊடகத்துறை என்பது தேசியரீதியில் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களைக் கையாளும்போதும், அங்கு பணியாற்றக்கூடிய ஊடகவியலாளர்கள் ஒருவகையில் தொழில்சார் தகைமைக்குள் உள்வாங்கப்பட்டிருக்கும்போதும், வடக்கை மையப்படுத்தியதான பிராந்திய ஊடகத்துறை என்பது ஒப்பீட்டளவில் தொழில்சார் தகைமைகளில் தனக்கேயுரித்தான பல்வேறு சந்தர்ப்பங்களையும் சவால்களையும் கொண்டிருக்கின்றது. இது ஊடகத்துறையில் வளங்கள், வாய்ப்புகள், பிரதிநிதித்துவம், சித்திரிப்பு மற்றும் பெண்களின் பங்களிப்பின் அடிப்படையில் வலுவான வடக்கு மற்றும் தெற்கு வேறுபாட்டை பிரதிபலிக்கிறது. வட பிராந்தியத்தை அடிப்படையாகக் கொண்ட பெண் ஊடகவியலாளர்களின் வாய்ப்புக்கள் மற்றும் சவால்களை தனிப்பட்டவை, பணியிடம், சமூகம் என்ற மூன்று அடித்தளங்களிலிருந்து நோக்க முடியும். இதனை மேலும் ஆராய்வதற்காக, வடபிராந்தியத்தில் பணியாற்றும் முழுநேர மற்றும் சுயாதீன பெண் ஊடகவியலாளர்கள் 20 பேர் மாதிரிகளாகக் கொள்ளப்பட்டனர். ஆய்வில் அளவறிதலானது மூன்று நிலைமைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட பிராந்தியத்தில் இருக்கும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றில் பணியாற்றிய -பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய பெண் ஊடகவியலாளர்களது தனிப்பட்ட ஆழமான நேர்காணல், வினாக்கொத்து மற்றும் குவிமையக் கலந்துரையாடல் ஆகியவற்றினூ டாகத் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன. பெண் ஊடகவியலாளர்கள் தனிப்பட்ட ரீதியாகவும், பணியிடம் மற்றும் சமூக அளவிலும் சவால்களையே அதிகம் கொண்டுள்ளனர். ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, வட பிராந்திய பெண் ஊடகவியலாளர்கள் பணிநிமித்தம் உளவியல் ரீதியாக மகிழ்ச்சி, சரியான நேரத்தில் சம்பளம், ஓரளவுக்குப் பயிற்சி மற்றும் தொழில்விருத்தி வாய்ப்புகள், நிறுவனத்திற்கு வெளியே ஓரளவு சுதந்திரமாக செயற்படும் வாய்ப்பு, ஊடகக் கல்வியில் திருப்தி, செய்தி சேகரிப்பில் குறைந்தளவிலான சட்ட மற்றும் அணுகல் சவால்கள் போன்ற வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இருப்பினும், ஊடகப் பணியைத் தொடர்வதில் குடும்பத்தாரின் ஆதரவின்மை, திருப்தியற்ற ஊதிய உயர்வு, தொழில்சார் அச்சுறுத்தல்கள், பால்நிலை வேறுபாடுகள், பதவி உயர்வு குறித்த அதிருப்தி மற்றும் நிறுவனத்திற்குள் சுதந்திரமாகச் செயற்பட முடியாத நிலை போன்ற குறிப்பிடத்தக்க சவால்களையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்பது ஆய்வுவழி வெளித்தெரியவந்தது. |
en_US |