| dc.description.abstract |
கடவுளின் படைப்புகளில் மேலான படைப்பாகக் கருதப்படுகின்ற மனிதனுக்குக் கிறிஸ்தவத்தில் அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மனிதனானவன் ஒரு சமூகப் பிராணி. ஆகையால் அவன் சமூகமாகவே வாழ அழைக்கப்பட்டுள்ளான். அந்தவகையில் இச்சமூகத்தில் ஒரு மனிதன் பல பணிகளைச் செய்யும் போதும் அவருடைய பணிகளையோ அவர் செய்த நல்ல விடயங்களையோ எண்ணிப் பார்க்கும் தன்மை என்பது குறைவாகவே காணப்படுகிறது. இப்பின்னணியில் அமெரிக்காவில் லூசியானா மாநிலத்தில் (1924) பிறந்து, வளர்ந்து, இயேசு சபையில் இணைந்து ஓர் அருட்சகோதரராக இலங்கைக்கு வருகை தந்து, தொடர்ந்து தமது இறையியல் கல்வியை முடித்து ஓர் அருட்தந்தையாய் இலங்கையில் பணியாற்றினார். மிலர் அடிகளார் அண்ணளவாக 70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையின் மட்டக்களப்பு மண்ணில் பணிகளை மேற்கொண்ட போதும் அவருடைய பணிகள் குறித்த தெளிவாக்கங்கள் மக்கள் மத்தியில் மிகக் குறைவாகக் காணப்படுகின்றமை ஆய்வுப் பிரச்சினையாக நோக்கப்பட்டு, மறைந்த அமரர் ஹரி மிலர் அடிகளாரின் சமூக உருவாக்கப் பணிகளை கிறிஸ்தவ சமூகவியற் பார்வையில் எடுத்துரைப்பது ஆய்வின் பிரதான நோக்கமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆய்வில் இயேசு சபையின் வரலாற்றை அறிமுகம் செய்ய வரலாற்று முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் திருவிவிலியம், நூல்கள், சஞ்சிகைகள் போன்றவற்றினூடாக பெற்றுக்கொண்ட தரவுகள் தொகுத்தறிவு முறையூடாக முன்வைக்கப்படுவதுடன், மிலர் அடிகளாருடைய சமூக உருவாக்கப் பணிகள் பற்றிய விடயங்களைப் பெறுவதற்கு நேரடி சந்திப்பு செய்ததால் நேர்காணலும், அவதானிப்பு முறையும் பயன்படுத்தப்படுகின்றது. கிறிஸ்தவ சமூகப் போதனைகளோடு அடிகளாரின் பணிகளை ஒப்பிடுவதால் ஒப்பீட்டு ஆய்வு முறையியல் பயன்படுத்தப்படுகின்றது. அடிகளார் வாழ்ந்த யுத்த காலச் சூழ்நிலையில் சாதாரண மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்களுடைய உரிமைகள், உடைமைகள் இழக்கப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். இத்தகைய சந்தர்ப்பங்களில் அடிகளார் மக்களுக்கான நீதியை, சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்க பல அமைப்புக்களை உருவாக்கினார். சமாதானப் பேரவை, சமய நல்லிணக்கப்பேரவை, புற்றுநோய்க்கழகம் போன்றவற்றை அமைத்ததோடு ரோட்டரி கழகம், கிழக்கு தொழிநுட்ப நிறுவகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பல அமைப்புக்களின் தலைவராக, அங்கத்தவராய் பல பணிகளை மேற்கொண்டுள்ளார். இவற்றின் மூலமாக இன்று வரையும் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திரு அவையினுடைய அனைத்து சமூக போதனைகளும் மனித மாண்பை வலியுறுத்தியே அமைகின்றன. இதன்படி மனிதன் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதே நீதியாகும். அடிகளார் இதனை முன்னிறுத்தியே தமது
சமூக உருவாக்க பணிகளை மேற்கொண்டிருந்தார். அடிகளாரைப் பற்றி பெற்றுக் கொள்ளப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அவருடைய சமூக உருவாக்கப் பணிகளை ஆராய்ந்து அவற்றைக் கிறிஸ்தவ சமூகவியல் பார்வையில் வெளிப்படுத்துவதாக இவ் ஆய்வானது அமைந்துள்ளது. |
en_US |