| dc.description.abstract |
ஒரு நாட்டில் காணப்படும் வளங்களில் நிலவளமானது மிகப்பெறுமதிமிக்கதும் மிக அவசியமான வளமாகவும் காணப்படுகின்றதுடன் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையானதாகவும் அமைந்துள்ளது. நிலப்பயன்பாடு சரியான முறையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் போது நிலைத்து நிற்கும் அபிவிருத்தி செயற்பாட்டினை முன்னெடுக்கக் கூடியதாக காணப்படும். யாழ்ப்பாண மாவட்டமானது கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற யுத்தநிலைமைகள், சுனாமி, திட்டமிடப்படாத மனித நடவடிக்கைகள் போன்றவற்றினால் நிலவளமானது துரித மாற்றத்திற்கு உட்பட்டு வந்துள்ளன. இந்த நிலப்பயன்பாட்டு மாற்றங்கள் சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகப் பிரிவிலும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தின் சண்டிலிப்பாய்ப்
பிரதேச செயலகப் பிரிவில் நிலப்பயன்பாட்டு வகைப்பாட்டினை அடையாளம் காணுதல்,
ஆய்வுப்பிரதேசத்தில் குறிப்பிட்ட காலப்பகுதிக்கிடையிலான நிலப்பயன்பாட்டு வகைகளினது மாற்றங்களினை கால ரீதியில் ஒப்பிட்டு இனங்காணல், ஆய்வுப்பிரதேசத்தில் நிலப்பயன்பாட்டு மாற்றங்களையும், மாற்றங்களை ஏற்படுத்திய காரணிகளையும் அதன் விளைவுகளையும் இனங்காணல் போன்ற பிரதான நோக்கங்களை இவ் ஆய்வானது கொண்டமைந்துள்ளது. இந் நிலப்பயன்பாட்டு மாற்றப்பகுப்பாய்வினை மேற்கொள்வதற்காக புவியியல் தகவல் ஒழுங்கு மற்றும் தொலையுணர்வு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்கான நிலப்பயன்பாட்டு தரவுகள் முதலாம்நிலைத் தரவுகளான நேரடி கள அவதானம் மூலமும், இரண்டாம் நிலைத்தரவுகளான சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலகப் பிரிவின் உயர் தெளிதிறன் செய்மதிப்படம், இலங்கை
நிலஅளவை திணைக்களத்தின் இடவிளக்கப்படம் (1:50,000) மற்றும் சண்டிலிப்பாய்ப் பிரதேச
செயலக புள்ளிவிபரத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டன. 2002, 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டு
நிலப்பயன்பாட்டுப்படங்கள் மேற்பொருத்துதல் செய்யப்பட்டு மாற்றங்கள் கண்டறியப்பட்டன. 22 வருட காலப்பகுதிக்கு இடையில் நெல்நிலப்பரப்பு, வயல் பயிர்கள் (Field crops), ஏனையவைகள் (Others), பனை, தரிசு நிலம், சதுர்ப்பு நிலம் என்பன 601 ஹெக்டயர், 481 ஹெக்டயர், 63 ஹெக்டயர், 59 ஹெக்டயர், 12 ஹெக்டயர், 0.5 ஹெக்டயர் நிலப்பரப்பு முறையே குறைவடைந்து காணப்படுகின்றன. அதே சமயம் கட்டடங்கள், நீர் நிலைகள், தென்னை என்பன 1, 207 ஹெக்டயர், 6 ஹெக்டயர், 0.5 ஹெக்டயர் நிலப்பரப்பு அதிகரித்து காணப்படுகின்றன. ஆய்வுப்பிரதேசத்தில் நிலப்பயன்பாட்டு மாற்றம் அதிகளவில் மாதகல், பண்டத்தரிப்பு, சண்டிலிப்பாய், மானிப்பாய், ஆனைக்கோட்டை, மாரிசங்கூடல் மற்றும் இளவாலை ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளன என்பது இடம்சார் ரீதியில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவ் ஆய்வின் மூலம் பெறப்படும் நிலப்பயன்பாடு மற்றும் நிலப்போர்வை மாற்றம் தொடர்பான தகவல்கள் இடம்சார் ரீதியில் தற்போதைய நிலைமைகளை விளங்கிக்கொள்ளவும் அதனடிப்படையில் திட்டங்களுக்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வழிகாட்டியாக அமையும். |
en_US |