Abstract:
மரணம் என்பது மனித உணர்வுகளுக்கும் மெய்யியல் சிந்தனைக்கும் இடையில் நிலவும் ஆழமான உணர்திறன் கொண்ட நிகழ்வாகும். மனிதனது மரணத்தைப் பற்றிய சமூகக் கதையாடல்களானவை அவனது வாழ்வு, மதம், பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களை பிரதிபலிக்கும் ஓர் அர்த்தமுள்ள உரையாடலாக மாறியுள்ளது. இவ்வாறு வாழ்க்கை முறைகளில் உள்ள கதையாடல்களில் மெய்யியல் நோக்கங்கள் குறித்த ஆய்வுகள் இன்று வரை கதைப்பாங்குகளில் மட்டும் காணப்படுகின்றன. இங்கு மரணக் கதையாடல்கள் சமூகத்தில் எவ்வாறு உருவாகின்றன அவை மக்களிடையே எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவற்றின் பின்னணியிலுள்ள தத்துவங்கள் போன்ற விடயங்களை ஆய்வுசெய்வதனை நோக்கங்களாகக்கொண்டு காணப்படுகிறது. இதற்காக முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் பெறப்பட்டதோடு பெறப்பட்ட தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதற்காக எண்ணக்கருப்பகுப்பாய்வு, பொருள்கோடல் பகுப்பாய்வு, உரையாடல் பகுப்பாய்வு, ஒப்பீட்டுப் பகுப்பாய்வு, கதையாடல் பகுப்பாய்வு போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது மரணத்திற்கான சமூகக் கதையாடல்களானவை மதம், பண்பாடு மற்றும் சமூகச் சூழலைப் பொறுத்து மாறுபடுகின்றன என்பதையும் மரணக் கதையாடல்கள் சமூகத்தின் மாற்றத்துக்கு வழிவகுக்கின்றன என்பதையும் மற்றும் மனிதர்கள் மரணத்தை எவ்வாறு பார்வையிடுகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துவதோடு மரணத்தைப் புரிந்துகொள்வதற்கான தளத்தை அமைப்பதோடு மரணத்தை ஓர் அறிவியல், சமூகவியல் மற்றும் மெய்யியல் சந்திப்புப் புள்ளியாக அமைத்துக் கொள்கிறது என்பதையும் விளக்குகிறது. வாழ்க்கையின் முடிவில்லாத தேடலாக மரணத்தைக் காணும் இந்தப் பார்வையை மேலும் விரிதாக்கி மரணம் மனிதன் எதிர்கொள்ளும் வாழ்க்கையின் அர்த்தம் குறித்த குழப்பத்தையும், அர்த்தத் தேடலையும், மரணத்தின் விளைவாக மனிதன் எப்படி சிந்திக்கிறான் என்பதையும் விவாதிக்கிறது. இதன் அடிப்படையில் மரணம் பற்றிய கதையாடல்களானவை சமூக ஒழுங்கைக் கட்டமைக்கும் ஒரு கருவியாக இருக்கும் அதே சமயத்தில் அந்தக் கதையாடல்களுக்குள் காணப்படும் மெய்யியல் அடிப்படைகளும் சமூக அமைப்புகளின் கட்டமைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது.