| dc.description.abstract |
இவ்வாய்வானது கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுய செயல்திறனை அளவீடு செய்து குறைந்த செயல்திறன் கொண்ட கட்டிளமைப்பருவ மாணவர்களிற்கு குழுத்தலையீடு வழங்கி சுயசெயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக கிளிநொச்சி தெற்கு வலயத்தில் கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையை மையப்படுத்தியதாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தரம் 09, 10, 11 ஐச் சேர்ந்த மாணவர்கள் நோக்கம் கருதிய மாதிரியெடுப்பு முறை மூலம் மாதிரிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தரவு சேகரிப்புக் கருவியாக Ralf Schwarzer மற்றும் Matthias Jerusalem என்பவரால் 1995ம் ஆண்டு உருவாக்கப்பட்ட General Self - Efficacy Scale (GSE) என்ற வினாக்கொத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை ஆய்வு வடிவம் (Experimental Research Design) மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரவுப்பகுப்பாய்வின் போது மாணவர்களிடம் பெறப்பட்ட தரவுகள் சமூக விஞ்ஞானப் புள்ளிவிபரவியல் மென்பொதியினைப் (SPSS) பயன்படுத்தி விபரணப் பகுப்பாய்வு மற்றும் அனுமானப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு ஒரு மாதிரிப் பரிசோதனை, இணைக்கப்பட்ட மாதிரிகள் T சோதனை, சுதந்திரமான இரு மாறிகளிற்கிடையான பரிசோதனை, இணைவுப் பரிசோதனை, பிற்செலவு பகுப்பாய்வு முதலியன மேற்கொள்ளப்பட்டுத் தரவுப் பகுப்பாய்வு முடிவுகள் பெறப்பட்டன. ஆய்வின் முடிவுகளாக, கிளிநொச்சி இரணைதீவு பாடசாலை கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுயசெயல்திறன் (X̅=28.38, P=.000) சராசரியான நிலையிலுள்ளது. கிளிநொச்சி இரணைதீவு பாடசாலை கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுய செயல்திறன் குழுத்தலையீட்டின் பின்னர் (X̅=35.93> P=.000) அதிகரித்துக் காணப்படுகின்றது. கிளிநொச்சி இரணைதீவு பாடசாலை கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுயசெயல்திறனில் பால்நிலை (முன்பரிசோதனையின் போது ஆண்களிற்கு X̅=26.68>, பெண்களிற்கு X̅=30.62 MfTk;> F =.461, P=.035) காணப்பட்டு பால்நிலை வேறுபாடு காணப்பட்ட அதேவேளை (குழுத்தலையீட்டின் பின் ஆண்களிற்கு X̅= 35.94, பெண்களிற்கு X̅=35.92> F =.023, P= .985) வேறுபாடு காணப்படவில்லை. கிளிநொச்சி இரணைதீவு பாடசாலை கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுய செயல்திறனிற்கும் வயதிற்கும் (முன்பரிசோதனையில் R=-.367, P=.004 ஆகவும் குழுத்தலையீட்டின் பின் R=.042, P=.750) இடையில் தொடர்பு காணப்படவில்லை. கிளிநொச்சி இரணைதீவு பாடசாலை கட்டிளமைப்பருவ மாணவர்களின் சுய செயல்திறனில் கல்வி கற்கும் வகுப்பு நிலை (முன்பரிசோதனையில் R2=9.2% , F= 6.952, P= .011 ஆகவும் குழுத்தலையீட்டின் பின் R2= - 1.4% , F= .164, P= .687) செல்வாக்கு செலுத்தவில்லை எனும் முடிவுகள் பெறப்பட்டன. இதனடிப்படையில் கட்டிளமைப் பருவ பாடசாலை மாணவர்களிற்கு உளவியல் குழுத்தலையீட்டை சரியான கால இடைவெளியில் வழங்குதல் மூலம் சுய செயல்திறனை மேம்படுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டது. |
en_US |