Abstract:
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி உலகில் 4 நபர்களுக்கு ஒருவர் ஏதாவது ஒரு உளநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மித்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2021ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகில் அண்மித்த உளநோயாளார்கள் சதவீதம் 13.9% ஆகும். இன்றைய உலகில் மக்கள் உளநோயால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். உளநோய்கள் மிதமானது தொடக்கம் தீவிரமானது வரை பல்வேறு வகைகளில் காணப்படுகின்றன. ஆனாலும் அதனையும் தாண்டி உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்கள் பல்வேறு வகையான சிக்கல்களுக்கும் பராமரிப்புச் சுமை மற்றும் மனஅழுத்த நிலைக்கும் உள்ளாகின்றனர். பொதுவாகவே உளநோயாளர்களை பராமரிக்கும் பராமரிப்பாளர்கள் பற்றி யாரும் கவனத்தில் கொள்வதில்லை. அவர்களின் உடல், உள, மனவெழுச்சி மற்றும் உணர்வுகள் குறித்து புரிந்து கொள்ளவோ அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்ளவோ முயற்சிப்பதில்லை. வெறுமனே அவர்களைப் புரிந்து கொள்ளாமல் அவர்களின் சொல், செயல் மூலம் மேலும் பராமரிப்பாளர்களை சிரமத்துக்கு உள்ளாக்கக் கூடிய நிலைப்பாடே இன்று வழமையாகக் காணப்படுகிறது. பராமரிப்பாளர்களின் நிலை குறித்து குறைவான போதிய அறிவற்ற நிலைப்பாடே இன்றைய சமூகத்தில் காணப்படுகிறது. மேலும் பராமரிப்பாளர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை பற்றியோ அல்லது அவர்கள் வாழ்க்கைத் திருப்தியை ஏற்படுத்துதல் தொடர்பாகவோ எதுவித வழிகாட்டலோ தெளிவுபடுத்தலோ அற்ற நிலைப்பாடே காணப்படுகிறது. உளநோயாளர்களைவிட உளநோயால் பாதிக்கப்பட்டவர்களது பராமரிப்பாளர்களின் பராமரிப்பு சுமை மற்றும் மனஅழுத்தமானது மிகவும் கவனத்திற்கு உரிய விடயமாகக் காணப்படுகிறது. பராமரிப்புச் சுமை எனப்படுவது குடும்ப பராமரிப்பாளர்களால் அனுபவிக்கப்படக்கூடிய உடல், உணர்ச்சி, சமூக மற்றும் பொருளாதார சிக்கல்களை குறிக்கிறது. உடலியல், உளவியல், சமூக, மனவெழுச்சி மற்றும் பொருளாதார ரீதியான அதிகப்படியான சுமை அல்லது அதிகப்படியாகப் பொறுப்பாக்கப்பட்ட நிலையாகக் காணப்படுகிறது. தகவலறிந்த ஒப்புதல் அடிப்படையில் வைத்தியசாலை மனநலப்பிரிவில் உள்நோயாளர் மற்றும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறும் உளநோயாளர்களின் பராமரிப்பாளர்களில் (15%) 60 குடும்ப பராமரிப்பாளர்கள் மாத்திரமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவ் ஆய்வானது பண்புசார் மற்றும் அளவுசார் முறைகளை உள்ளடக்கிய ஒரு விவரண ஆய்வாகும். திருகோணமலை மாவட்ட தள வைத்தியசாலை, மனநலப்பிரிவில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறும் 400 உளநோயாளிகளில் 60 உளநோயாளிகளின் குடும்ப பராமரிப்பாளர்கள் நோக்கம் கருதிய மாதிரி தெரிவு நுட்பத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். முதலாம் நிலை மற்றும் இரண்டாம் நிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு அத் தரவுகளின் அடிப்படையிலும் கருதுகோள்களின் அடிப்படையிலும் ஆய்வு மாதிரிகள் SPSS மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு உள நோயாளர்களின் குடும்ப பராமரிப்பாளர்கள் மன அழுத்தம் மற்றும் பராமரிப்புச் சுமையை எதிர்கொள்கின்றனர் எனவும் உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்களில் 40 வயதிற்கும் குறைவான வயதுடைய பராமரிப்பாளர்களைவிட 40 வயதிற்கும் கூடிய வயதுடைய பராமரிப்பாளர்கள் அதிகளவான மனஅழுத்தம் மற்றும் பராமரிப்புச்சுமைக்கு உள்ளாகின்றனர். மேலும் உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்களில் 50,000 ரூபாய்க்கு அதிகரித்த மாதவருமானம் பெறும் பராமரிப்பாளர்களைவிட 50,000 ரூபாய்க்கு குறைவான மாதவருமானம்
பெறும் பராமரிப்பாளர்கள் அதிகளவான மனஅழுத்தம் மற்றும் பராமரிப்புச்சுமைக்கு உள்ளாகின்றனர். மிதமான உளநோயுடைய உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்களைவிட தீவிரமான உளநோயுடைய உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்கள் அதிகளவான மனஅழுத்தம் மற்றும் பராமரிப்புச்சுமையை அனுபவிக்கின்றனர் எனவும் ஒரு வருடத்திற்கும் குறைவாக உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்களைவிட ஒரு வருடத்திற்கும் அதிகமாக உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்கள் அதிகரித்த மனஅழுத்தம் மற்றும் பராமரிப்புச்சுமையை எதிர்கொள்கின்றனர் என்பனவும் இவ்வாய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் உளநோயாளர்களைப் பராமரிக்கும் குடும்ப பராமரிப்பாளர்கள் பராமரிப்புச் சுமையை எதிர்கொள்வதோடு வயது, வருமானநிலை, நோயின் தன்மை மற்றும் நோயை எதிர்கொள்ளும் காலம் என்பன அவர்களின் பராமரிப்புச் சுமையில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது உறுதியாகிறது.