| dc.description.abstract |
யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்ற யாழ்ப்பணக்கோட்டை தொடக்கம் பூம்புகார் வரையான கடல்சார் பிரதேசமானது பண்டைய காலம் தொடக்கம் சமகாலம் வரை கேந்திரமுக்கியதுவமான இடமாகக் காணப்படுகின்றது. இதனால் ஏனைய நாட்டவர்களின் வருகைகள், வணிக பரிமாற்றங்கள் மற்றும் ஐரோப்பியர் ஆதிக்கம் இடம்பெற்ற ஒரு பிரதேசமாக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது. இவற்றை ஆதரப்படுத்தும் சான்றுகளாகப் பண்டைய இலக்கியங்கள், போர்த்துகேயர், ஒல்லாந்தர்கால ஆவணங்கள் மற்றும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்கள் போன்றன காணப்படுகின்றன. இவ்வாய்வானது ஐரோப்பியர்களின் வருகையினால் இப் பிரதேசங்களில் காணப்படுகின்ற தொட்டுணரக்கூடிய மற்றும் தொட்டுணரமுடியாத மரபுரிமைகளை அடிப்படையாகக்கொண்டு சுற்றுலாவிற்கான கடல்சார் மரபுரிமை வாய்ப்புக்களையும் வளங்களையும் அடையாளப்படுத்துவதை முக்கியமானதாக கொண்டுள்ளது. இப்பிரதேசங்களில் காணப்படும் தேவாலயங்கள், துறைமுகங்கள், கோட்டை, வெளிச்சவீடு, கடற்கலங்கள், பாரம்பரிய கைத்தொழில் உபகரணங்கள் போன்ற தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளும் மற்றும் அப்பிரதேச வாழ்மக்களின் சடங்குகள் சம்பிரதாயங்கள், நம்பிக்கைகள், பாரம்பரிய கைத்தொழில்கள், வாய்மொழிமரபுகள் போன்ற தொட்டுணரமுடியாத மரபுரிமைகளும் இப் பிரதேசங்களின் தொன்மையை எடுத்துக்காட்டுகின்றன. அந்தவகையில் இக்கடல்சார் மரபுரிமை வாய்ப்புக்களையும் வளங்களையும் முதன்மைப்படுத்தி இப் பிரதேசங்களைச் சுற்றுலாரீதியில் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் இப்பிரதேசங்களின் பாரம்பரியங்களையும் பழமைகளையும் அடையாளப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்தவகையில் இவ்வாய்வுக்கு முதலாம் நிலைத்தரவுகளாக நேர்காணல், களஆய்வு, கலந்துரையாடல் போன்றனவும் இரண்டாம் நிலைத் தரவுகளாக நூல்கள், சஞ்சிகைகள், இணையத்தளகட்டுரைகள் போன்றனவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆய்வானது வரலாற்று முறையில் அமைந்த விபரண ஆய்வு முறையியலைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுப் பிரதேசத்தில் கடல்சார் மரபுரிமை வாய்ப்புக்களும், வளங்களும் காணப்படுகின்றன. அந்தவகையில் தொட்டுணரக்கூடிய மற்றும் தொட்டுணரமுடியாத மரபுரிமைகளைச் சுற்றுலா ரீதியான மூலவளங்களாகப் பயன்படுத்தி ஆய்வுப் பிரதேசத்தைச் சுற்றுலா ரீதியாக வளர்ச்சியடையச் செய்யலாம் என்பது இவ்வாய்வின் முடிவாகக் காணப்படுகின்றது. |
en_US |