| dc.description.abstract |
ஒரு சமூகத்தினுடைய சமயம், பராம்பரியம், பொருளாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதே
பண்பாடாகும். இலங்கையினுடைய பண்பாட்டை ஆராய்ந்தால் அது பல நாடுகளின்
பண்பாட்டம்சங்களை தன்னுள் கொண்டு காணப்படுவதனை காணலாம். அதில் இந்தியப்
பண்பாட்டம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இத்தகைய இந்தியத் தொடர்புகளே பிற்பட்டகாலங்களில் இலங்கை கடல்கடந்த பிறநாடுகளுடனும் பண்பாட்டுத் தொடர்புகளை ஏற்படுத்தப் பின்னணியாக அமைந்திருந்தன. அதில் தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை கொண்டிருந்த பண்பாட்டு உறவுகள் தனித்துவமானதாகும். ஆரம்பகாலம் முதல் தென்கிழக்காசிய நாடுகளுடன் இலங்கை அரசியல், பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இவ் உறவுகளே பிற்பட்ட காலங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பண்பாட்டு உறவுகள் வலுப்பெற ஏதுவாக அமைந்திருந்தன எனலாம்.
தென்கிழக்காசிய நாடுகளான பர்மா, ஸ்ரீ விஜயம், கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளுடன் முதலாம் விஜயபாகு, முதலாம் பராக்கிரமபாகு, இரண்டாம் பராக்கிரமபாகு போன்றோர் தொடர்பு கொண்டிருந்தனர். இலங்கைக்கும் தென்கிழக்காசியாவுக்கும் இடையிலான பண்பாட்டு உறவுகள் கி.பி 16 ஆம் நூற்றாண்டுவரை எவ்வாறு காணப்பட்டது, அதற்கான வரலாற்றுப் பின்னணி யாது என்ற ஆய்வு வினாக்களை அடிப்படையாகக்கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகின்றது. ஆய்வின் பிரதான நோக்கமாக அமைவது வரலாற்று அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறிவதாகும். அத்துடன் இலங்கையின் பண்பாட்டு வளர்ச்சியில் தென்கிழக்காசியாவின் வகிபாகத்தைக் கண்டறிதலும் இவ்வாய்வின் நோக்கமாக
அமைகின்றது. மேற்படி ஆய்விற்கு முதலாம் நிலைத்தரவுகளும், இரண்டாம் நிலைத்தரவுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வானது வரலாற்று ஆய்வு அணுகுமுறையையும், பண்பாட்டு ஆய்வு முறையையும் அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்படுகின்றது. அவ்வகையில் அரசியல், பொருளாதாரம், சமயம், கட்டிடம், சிற்பம், இலக்கியம் போன்ற பல்வேறு விடயங்களிலும் நீண்டகாலமாக இரு நாடுகளுக்கும் இடையிலே பண்பாட்டு உறவுகள் காணப்பட்டுள்ளது. எனவே இவ்வாய்வின் பிரகாரம் தென்கிழக்காசியாவின் பண்பாட்டம்சங்கள் இலங்கையிலும், இலங்கையின் பண்பாட்டம்சங்கள் தென்கிழக்காசியாவிலும் தாக்கம் செலுத்தியதைக் காணக்கூடியதாகவுள்ளது. அவ்வகையில் இலங்கைக்கும், தென்கிழக்காசியாவுக்கும் இடையே இருவழி உறவுகள் காணப்பட்டுள்ளது என்பது இவ்வாய்வின் முடிவாக விளங்குகின்றது. |
en_US |