Abstract:
பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மக்களின் அரசியல் பங்குபற்றல்களை அதிகரிப்பதனை தூரநோக்காகக் கொண்டு நகரசபைகள் செயற்பட்டு வருகின்றன. பருத்தித்துறை நகரசபையானது யாழ்குடாநாட்டில் வடமராட்சி பிரதேசத்தில் 4.615 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 11636 மக்கள் தொகையினையும் உள்ளடக்கிய ஒரு நிர்வாக அரசியல் பிரதேசமாகும். யுத்தத்திற்குப் பின்னரான பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மக்களின் அரசியல் பங்குபற்றல்களில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளினை இனங்கண்டு, அவற்றினை வெற்றி கொள்வதற்கான வழிவகைகளையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தி, அதனை பருத்தித்துறை நகரசபை நடைமுறைப்படுத்துகின்ற போது பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட அரசியல் இளைஞர்களின் பங்குபற்றல்களை அதிகரிக்க முடியும் என்பது தொடர்பாக இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இவ் ஆய்வானது பண்புசார், அளவுசார் முறைகளைக் கையாள்வதோடு புள்ளிவிபரவியல், விபரணப்பகுப்பாய்வு என்பவற்றை பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது பருத்தித்துறை நகரசபைக்குட்பட்ட மக்களின் அரசியல் பங்குபற்றல் செயற்பாடுகள் எவ்வாறு காணப்படுகின்றது? அவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக மக்கள் எவ்வாறான திருப்தி மட்டத்தில் உள்ளனர், என்பது தொடர்பாக முதலாம் நிலைத் தரவுகளான வினாக்கொத்து, குழுக்கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் முறைகள் மேற்கொள்ளப்பட்டடு தரவுகள் பெறப்பட்டுள்ளன. மேலும் ஆய்விற்கு தேவையான கோட்பாட்டு ரீதியிலான தரவுகளை, இரண்டாம் நிலைத் தரவுகளான ஆய்வுக் கட்டுரைகள், இணையத்தளங்கள், புத்தகங்கள், சஞ்சிகைகள், நகரசபைகளின் ஆவணங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றம் தொடர்பான பாராளுமன்றச் சட்டங்கள் என்பனவற்றின் மூலம் பெற்றுக்கொண்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. எனவே எனது ஆய்வின் கருதுகோளானது “யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பருத்தித்துறை நகரசபை பிரதேச இளைஞர்களின் அரசியல் பங்குபற்றல் அதிகரித்துள்ளது” என்பதற்கு அமைவாக மேற்குறிப்பிட்ட ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் பகுப்பாய்வுகள் அடிப்படையில் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் பருத்தித்துறை நகரசபைப் பிரதேச இளைஞர்களின் அரசியல் பங்குபற்றல் அதிகரித்துள்ளது என்பது மெய்ப்பிக்கப்படுகின்றது.