Abstract:
இலங்கையின் உள்நாட்டு யுத்தம் ஒரு நீண்டகால சமூக, அரசியல் மற்றும் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தில், மக்களின் அடிப்படை வாழ்வாதாரம், சமூகக் கட்டமைப்பு மற்றும் நிர்வாக, அரசியல் செயற்பாடுகள் என்பன முழுமையாகப் பாதிப்படைந்து காணப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் யுத்தத்திற்கு பின்னரான காலத்தில் உள்ளூராட்சி அரசாங்க கட்டமைப்புகள் குறிப்பாக பிரதேச சபைகள் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் சமூகத்தினை மீளக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் அரசியல், பொருளாதார அபிவிருத்திக்கும் முக்கிய பங்கு வகித்து வந்தன. அந்தவகையில் வலி தெற்கு பிரதேச சபை, வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. அந்தவகையில் இவ் வலி தெற்கு பிரதேச சபையானது இலங்கையில் உயர்தரத்திலான சேவைகளினையும் உட்கட்டமைப்பு வசதியினையும் கொண்ட உள்ளூராட்சி அமைப்பாக விளங்குதல் எனும் தூரநோக்கினைக் கொண்டு தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றது. வலி தெற்கு பிரதேசமானது யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தின் மத்திய பகுதியில் 30.01 சதுர கிலோமீற்றர் பரப்பளவையும், 51612 மக்கள் தொகையினையும் உள்ளடக்கிய ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது. இதற்கமைய, இவ் வலி தெற்கு பிரதேச சபை யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் மக்களது வாழ்வாதாரத்தினையும் உட்கட்டமைப்பினையும் விருத்தி செய்வதற்காகவும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளன என்பது தொடர்பாகவும் அந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது ஏற்படும் தடைகள் மற்றும் சவால்களை இனங்காண்பதாகவும் அச் செயற்பாடுகளின் செயல்திறன் மற்றும் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றையும் ஆராய்வதற்கு இவ் ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் ஆய்வானது பண்புசார், அளவுசார் முறைகளைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது யுத்தத்திற்குப் பின்னராக வலி தெற்கு பிரதேச சபையினால் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது என்பது தொடர்பாகவும், அந்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் தடைகள், சவால்கள், மனித வளப் பிரச்சினைகள், மற்றும் பௌதீக வளப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச சபை ஆளணியின் மற்றும் மக்களிடம் இருந்து தரவுகளினைப் பெற்றுக்கொள்வதற்கான முதலாம் நிலை தரவு மாதிரியான குழுக் கலந்துரையாடல், நேர்காணல் முறைகளின் ஊடாக தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆய்விற்குத் தேவையான கோட்பாட்டு ரீதியான தகவல்களினை இரண்டாம் நிலைத் தரவு சேகரிப்பு மாதிரியில் இருந்து பெற்றுப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் பகுப்பாய்வின் அடிப்படையில் பரிந்துரையும் முடிவுரையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் யுத்தத்திற்குப் பின்னர் அடிமட்ட மக்களின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தாலும் அச் செயற்பாடுகள் மீதான மட்டுப்பாடுகளும் வரையறைகளும் அமைந்தே காணப்படுகின்றது. அதனடிப்படையில் இவ் ஆய்வின் பிரகாரம் யுத்தத்திற்கு பின்னர் வலி தெற்கு பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்த பிரதேச மக்களுக்கு போதுமானவையாகவும் அவர்களினை திருப்திப்படுத்தக் கூடியதாகவும் அமையவில்லை என்ற கருதுகோளானது ஆதாரங்களின் மூலம் மெய்ப்பிக்க முயலுகிறது.