Abstract:
ஆசியாக் கண்டத்தின் வளம்மிக்க நாடான இலங்கையானது 1948ஆம் ஆண்டு சுதந்திரம்
அடைந்ததிலிருந்து அரசியல் பொருளாதார ரீதியான ஒரு வளர்ச்சிக்கான நெருக்கடி நிலையோடு போராடி வரும் வரும் நாடாகக் காணப்படுகின்றது. இந்நிலையில் அரசியல் பொருளாதார ரீதியான இலங்கையின் வளர்ச்சி நிலையானது, போர் மற்றும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பரவல் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையினால் பின்னடைவைச் சந்திக்க ஆரம்பித்தது. பொருளாதார நெருக்கடியை தீர்த்துக்கொள்வதற்கான வெளியுறவுக் கொள்கைகள், உள்நாட்டில் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றங்கள், இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாக ஏற்பட்டது. சமகாலத்தில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் குறைவடைந்து செல்லுகின்ற
தன்மை காணப்பட்டாலும் அது முழுமையானதாக மீண்டுவந்ததாக தெரியவில்லை. அவ்வகையில் நாட்டிற்கு பொருத்தமான பொருளாதார திட்டங்கள், அதன் நடைமுறைகள், அரசியல் கொள்கைகள் தொடர்பாக அரசாங்கத்திற்கும் மக்கள் மத்தியிலும் கூட்டிணைவு ஏற்பட வேண்டும். இலங்கை இந்திய அரசியல் பொருளாதார உறவு நிலையில் பொருளாதார நெருக்கடி கால தாக்கத்தின் போது இந்தியாவின் பக்கபலமானது இலங்கையின் நெருக்கடியை எதிர்கொள்ள உதவும் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த உறவு நிலைக்கு பின்னணியாக பல காரணிகள் காணப்பட்ட போதிலும் சமகாலத்தில் அவை அரசியல் பொருளாதார ரீதியில் செல்வாக்கு செலுத்தினாலும் கூட 2022ஆம் ஆண்டு கால பொருளாதார நெருக்கடிக்கு இந்திய அரசாங்கத்தின் உதவியானது அமைந்திருந்தது.
இந்தியாவின் இந்த அணுகுமுறையானது இலங்கைக்கு பொருளாதார நெருக்கடியின் மீட்சியின் போது எவ்வாறு காணப்பட்டன என்பது தொடர்பாக அதன் அரசியலையும் ஆராயும் விதமாக இந்த ஆய்வு அமைந்திருந்தது. அவ்வகையில் பண்புசார் ஆய்வு வடிவத்தினையும், இரண்டாம் நிலை தரவு சேகரிப்பு கருவிகளாகவும் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் கருதுகோளாக இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இலங்கை மீது இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்பது நிறுவுவதாக அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தில் பல்வேறு பொருளாதார திட்டங்கள், அரசியல் நகர்வுகளில் இந்தியாவினுடைய செல்வாக்கு இருப்பதனை காணமுடிகின்றது. தற்போதைய
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையின் கீழாக இலங்கை மற்றும் இந்தியா இடையிலான உறவு நிலையானது ராஜதந்திர அடிப்படையில் பல்வேறு மாற்றங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வகையில் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பின்னான சமகால சூழ்நிலையில் இந்தியாவின் செல்வாக்கானது அதிகரித்து வருவது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.