Abstract:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்பது பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறைகளின் தகவல்களுக்கான அணுகலை வழங்கும் ஒரு முக்கிய சட்டமாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அரச இயந்திரத்தின் வெளிப்படைத் தன்மையும் பகிரங்கத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட ஓர் அரிய வாய்ப்புத் தரப்பட்டிருக்கிறது. உண்மையான, துல்லியமான தகவல்களை அடிப்படையாகக்கொண்ட ஊடகத்துறையும் இந்த வாய்ப்பினால் பயனுறுதிபெறவும் வழியேற்பட்டுள்ளது. இந்தவகையில், “யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு” என்னும் இந்த ஆய்வானது யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களிடம் காணப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கங்கள், சட்டம் பற்றிய அறிவு, சட்டத்தினைப் பயன்படுத்தும் வாய்ப்புக்கள்;;, ஊடகவியலாளர்கள் மத்தியில் அதன் தாக்கம், கருத்துக்கள்;;, சட்டம் தொடர்பான சவால்கள் மற்றும் இடர்பாடுகள், வெற்றிக் கதைகள் என்பவற்றைக் கண்டறிய முயற்சித்தது. அந்தவகையில், இவ் ஆய்விற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20 ஊடகவியலாளர்களிடம் நேர்காணல்கள் மேற்கொள்ளப்பட்டு தரவுகள் சேகரிக்கப்பட்டன. அத்துடன், முதலாம் நிலைத் தரவுத்திரட்டலாக அவதானிப்பின் அடிப்படையில் தரவுகள் சேகரிக்கப்பட்டதுடன், இரண்டாம்நிலைத் தரவுத் திரட்டலாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரயோகப் பயன்களை முன்வைத்த ஆய்வேடுகள், நூல்கள், கட்டுரைகள் போன்றவை பயன்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பயன்பாடு அதிக அளவிலேயே இடம்பெற்று வருவதை பகுப்பாய்வு செய்யப்பட்ட முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் துல்லியமான தகவல்களை வழங்குவது மாத்திரமல்ல, ஊழல்களை, முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதற்கு உதவும் என்ற நம்பிக்கையும் யாழ்ப்பாண மாவட்ட ஊடகவியலாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி அரச அதிகாரிகளிடம் காணப்படும் தெளிவின்மை, அரச தகவல்களைத் தன்னார்வமாக வெளிப்படுத்தும் ஆர்வமின்மை, தகவல் அறியும் கோரிக்கைகளைத் தாமதப்படுத்துதல், கோரப்படும் தகவல்களை முழுமையாக வழங்கப் பின்னடிக்கும் உளப்பாங்கு ஆகியன முக்கிய தடைகளாகவும் அடையாளம் காணப்பட்டன.