Abstract:
ஆரம்ப காலக்கட்டங்களில் தொலைக்காட்சிச் சேவைகள் குறிப்பிட்ட நேர வரையறைக்குள்
மாத்திரமே, அதிலும் குறிப்பாக இரவுநேர ஒளிபரப்பாகவே இயங்கிவந்தன. தற்போது
தொலைக்காட்சிச் சேவைகள் இருபத்திநான்கு மணித்தியாலங்களும் ஏழு நாட்களும் மக்களைச் சென்றடைகின்றன. அதனால், உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்களில் Local Productions) மாத்திரமே தங்கியிருக்க முடியாத நிலை தொலைக்காட்சிச் சேவைகளில் காணப்படுகின்றது. இதனால், அலைவரிசைகளில் உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்களைக் காட்டிலும் வெளியக நிகழ்ச்சித் தயாரிப்புக்கள் (Productions from Outside) அதிகமாக ஒளிபரப்பப்படுகின்றன என்றொரு குற்றச்சாட்டு காணப்படுகின்றது. அதனைப் பரிசீலிக்கும்வகையில், இந்த ஆய்வு இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளின் உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்களைப் பற்றி ஆராய்வதை நோக்காகக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளில் உள்ளகத் தயாரிப்புக்களுக்கான முக்கியத்துவம், உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்கள் குறைவடைந்து செல்வதற்கான காரணங்கள், உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்களை மேற்கொள்வதிற் காணப்படும் சவால்களும் வாய்ப்புக்களும், அவற்றைப் பார்வையாளர்கள் மத்தியில் தக்கவைத்துக் கொள்ளப் பயன்படுத்தப்படும் உத்திமுறைகள் என்பவை ஆராயப்பட்டன. உள்ளடக்கப் பகுப்பாய்வாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் அவதானிப்பு, நேர்காணல்களைப் பயன்படுத்தி ஆய்வாளர் தரவுகளைத் திரட்டியுள்ளார். ஆய்வின் மாதிரிகளாக இயல்தகைமை மாதிரி வடிவமைப்பை அடிப்படையாகக்கொண்டு ஆறு இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகள் தெரிவுசெய்யப்பட்டு(சக்தி, வசந்தம், நேத்ரா, டான், ஐடீஊ தமிழ், கப்பிட்டல்) அவற்றின் ஒரு வாரத்திற்கான நிகழ்ச்சிநிரல் பட்டியல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதோடு குறித்த அலைவரிசைகளின்
பணிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் நேர்காணப்பட்டனர். உள்ளக நிகழ்ச்சித்
தயாரிப்புக்களைக் காட்டிலும் வெளியில் இருந்து பெறப்படும் நிகழ்ச்சிகளுக்கு அதிக இடமும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகின்றது என்பதும், அரச தொலைக்காட்சி அலைவரிசைகளைக் காட்டிலும் தனியார் அலைவரிசைகளில் வெளியக நிகழ்ச்சித் தயாரிப்புக்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது என்பதும் ஆய்வின்வழி கண்டறியப்பட்டது. உள்ளக நிகழ்ச்சித் தயாரிப்புக்களை மேற்கொள்ள அதிக செலவீனம் ஏற்படுவதும், அத்தகைய செலவீனத்திற்கு ஏற்றாற்போல் விளம்பரங்கள் வழியாக நிதி ஆதாயம் கிடைக்கப்பெறுவதில்லை என்பதும் தெரியவந்தது. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் உள்ளகத் தயாரிப்புக்களை ஓரளவு மேற்கொண்டாலும், மக்கள் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளின் பிரமாண்டத்தினை அவற்றிலும் எதிர்பார்க்கின்றனர் என்பதும் உணரப்பட்டது. ஒப்பீட்டளவில், தனியார் அலைவரிசைகள் தங்களது இருப்பையும் பிரபல்யத்தையும்; தக்கவைத்துக்கொள்வதற்காக அரச தொலைக்காட்சிகளை விட ஓரளவு உள்ளகத் தயாரிப்புக்களைத் தொடர்ந்தும் மேற்கொள்கின்றன என்பதை இந்த ஆய்வில் கண்டறிய முடிந்தது.