| dc.description.abstract |
அச்சு ஊடகங்களும் செய்திப் பத்திரிகைகளும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும் தற்காலத்தில் செய்திப் பத்திரிகைகளுக்கான சுற்றோட்டம் வாசகர் மத்தியில் வெகுவாகக் குறைவடைந்துள்ளது. குறிப்பாக, அச்சு வடிவில் வெளிவந்த பத்திரிகைகள் தற்காலத்தில் பல காரணங்களின் பொருட்டு இலத்திரனியல் பத்திரிகைகளாக வெளிவருவதனையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வாறு, குறித்த பத்திரிகைகள் இலத்திரனியல் வடிவத்தை நோக்கி நகர்வதினால் அந்நகர்வு குறித்து செல்வாக்கு செலுத்தக்கூடிய காரணிகள் தொடர்பில் ஆராயவேண்டிய தேவை காணப்படுகின்றது. அவ்வகையில், செய்திப் பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகைகளை நோக்கி நகர்வதிலுள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அறியும்பொருட்டு யாழ்ப்பாணப் பிராந்தியத்திலிருந்து வெளிவருகின்ற உதயன், வலம்புரி, யாழ் தினக்குரல், ஈழநாடு, காலைக்கதிர், முரசு, தேசியம் ஆகிய பத்திரிகைகள் மாதிரித் தெரிவுகளாகக் கொள்ளப்பட்டு ஆய்வுக்கான தரவுகள் திரட்டப்பட்டன. யாழ்ப்பாணப் பிராந்திய செய்திப் பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகை வடிவம் நோக்கி நகர்வதற்கான காரணங்களைக் கண்டறிதலே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். மேலும், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகள் எவ்வாறான சூழ்நிலையில் இலத்திரனியல் பத்திரிகையாக மாற்றம் பெற்றன, ஏன் அவை தொடர்ந்து இலத்திரனியல் பத்திரிகையாக தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன அல்லது ஏன் இடைநிறுத்தியுள்ளன, அச்சுப் பத்திரிகைகளில் ஏற்பட்ட எவ்விளைவுகள் இலத்திரனியல் பத்திரிகைக்கு வித்திட்டன, இலத்திரனியல் பத்திரிகையை வெளியிடுவதிலுள்ள சாதக மற்றும் பாதக விடயங்கள் தொடர்பாகக் கண்டறிவதே இந்த ஆய்வின் துணைநோக்கங்களாகக் கொள்ளப்பட்டன. இந்த ஆய்வானது பெறுநர் ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது. ஆய்விற்காக அவதானம், நேர்காணல் போன்ற முறைகளைப் பயன்படுத்தித் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்த மற்றும் வெளிவருகின்ற பத்திரிகைகளின் இலத்திரனியல் பத்திரிகை நோக்கிய நகர்வு, இலத்திரனியல் பத்திரிகையாக மாற்றம்பெற்றபோது நிறுவனங்களிடம் காணப்பட்ட தொழிநுட்பவசதிகள், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்த மற்றும் வெளிவருகின்ற பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகையை தக்கவைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் உத்திகள், இலத்திரனியல் பத்திரிகைகளின் சுற்றோட்டம், யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்த மற்றும் வெளிவருகின்ற பத்திரிகைகளின் இலக்குப் பெறுநர்கள், இலத்திரனியல் பத்திரிகைகளின் பக்கவடிவமைப்பு, இலத்திரனியல் பத்திரிகை மூலமான வருமானம், இலத்திரனியல் பத்திரிகையாக நகர்த்திச் செல்வதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலே பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வின் முடிவாக, யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவருகின்ற செய்திப் பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகை நோக்கி நகர்வதில் சற்று முனைப்பாக காணப்படுகின்றன. அதற்கான எதிர்கால திட்டமிடல்களை அவை முன்னெடுத்துவருகின்றன. இருப்பினும் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இருந்து வெளிவந்த மற்றும் வெளிவருகின்ற பத்திரிகைகள் இலத்திரனியல் வடிவத்தில் செயற்படுவதில் பல சிக்கல்களையும் எதிர்கொள்கின்றன. குறிப்பாக சில செய்திப் பத்திரிகைகளே அவ்வாறான சிக்கல்களை கடந்து இலத்திரனியல் பத்திரிகைகளாக செயற்படுவதனை ஆய்வாளரால் கண்டறியக்கூடியதாகவிருந்தது. மேலும் எதிர்காலத்தில் பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகை வடிவத்தை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் காணப்படுகின்றன. எனினும் குறிப்பிட்ட செய்திப் பத்திரிகைகள் இலத்திரனியல் பத்திரிகை வடிவம் நோக்கி நகர்வதினால் வாசகர்களின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்புவது கடினம் என்ற நிலைப்பாட்டில் இலத்திரனியல் பத்திரிகை வடிவத்தை சிறந்த முறையில் பயன்படுத்த தவறிவிட்டமையையும் ஆய்வாளரால் கண்டறியமுடிந்தது. |
en_US |