Abstract:
நாட்டார் பாடல்கள் ஒரு சமூகத்தினுடைய பண்பாடு, பாரம்பரிய வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், உணர்வுகள், தொழில்முறைகள் மற்றும் விழாக்களைப் பிரதிபலிக்கின்ற பாடல்களாகக் காணப்படுகின்றன. இந்தவகையில், மலையக மக்களின் மத்தியில் காணப்படும் நாட்டார் பாடல்கள், மலையக மக்களின் வாழ்வியலோடு ஒன்றித்திருப்பவை. இப்பாடல்கள் தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியாக அவர்களிடம் கடத்தப்பட்டு வருகின்றன. காலத்தின் தேவைகளுக்கேற்ப புதிய பாடல்களும் படைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இத்தகைய தன்மையுடைய நாட்டார் பாடல்கள் இன்றைய சூழலில் மலையக மக்களின் வாழ்வியலில் எத்தகைய செல்வாக்கைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறியும் தேவை அவசியமானதாகும். இதன்படி, தலவாக்கலையின் சென்கூம்ஸ் மற்றும் மட்டுக்கலை ஆகிய கிராமங்களை மையப்படுத்தியதாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாட்டார் பாடல்களின் மூலம் சமூக, பண்பாட்டு மற்றும் ஆன்மீகப் பாதிப்புகளை ஆராய்ந்து அவை அம்மக்களின் வாழ்வியலை எவ்வாறு அடையாளப்படுத்துகின்றன என்ற பிரதான நோக்கத்தோடு இந்த ஆய்வு பெறுதிசார் ஆய்வாக மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு, முதன்மைத் தரவுக் கருவிகளான அவதானம், நேர்காணல் மற்றும் நிகழ்நிலைக் கலந்துரையாடல்களின் துணையுடனும் இரண்டாம் நிலைத் தரவுக் கருவிகளான மலையக நாட்டார் பாடல்கள் தொடர்பிலான நூல்கள், சஞ்சிகைகள் மற்றும் இணையத்தளங்கள் ஆகியவற்றின் மூலமும் தரவு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்விற்கு பனிப்பந்து முறை மற்றும் தீர்ப்பாயம் ஆகிய மாதிரித் தெரிவுகளைக் கொண்டு மாதிரிகள் தெரிவுசெய்யப்பட்டன. பெறப்பட்ட தரவுகள் பெறுதிசார் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. ஆய்வாளரின் அவதானிப்பின் அடிப்படையிலும் தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையிலும் ஆய்வின் பேறாக, நாட்டார் பாடல்கள் மலையக மக்களின் வாழ்வியலின் சான்றாதாரமாக அமைந்திருக்கின்ற அதேவேளை, அவர்தம் தற்கால வாழ்வியலில் இப்பாடல்களின் பயன்பாடானது வீழ்ச்சி அடைந்திருக்கின்றது என்பதும், ஆரம்ப காலங்களில் பாடப்பட்ட பாடல்களின் தனித்துவமும் வாழ்வியல் நிகழ்வுகளில் அவை பெற்றிருந்த முக்கியத்துவமும் மாற்றமடைந்திருப்பதும் அடையாளம் காணப்பட்டது.