| dc.description.abstract |
சித்தர் சிவவாக்கியரின் காலம் குறித்த தெளிவான வரலாற்றுத் தகவல்கள் இல்லை. இருப்பினும், அவர் வாழ்ந்த காலத்தில் சமூகத்தில் நிலவிய சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள், போலிச் சடங்குகள், மற்றும் பயனற்ற உருவ வழிபாட்டு முறைகள் போன்ற சீர்கேடுகளை நீக்கி, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த முனைந்துள்ளார். அவரது பாடல்கள் சமயங்களை எதிர்ப்பதற்காக அல்லாது, அதற்குமாறாக, அவற்றின் பெயரால் நடைபெறும் சமூகப் பிற்போக்குத்தனங்களைக் கண்டிப்பதாகவே அமைந்துள்ளன. இந்த ஆய்வு சிவவாக்கியரின் பாடல்களில் பொதிந்துள்ள சமூக நல்லிணக்கக் கருத்துகளை ஆராய்கிறது. அருணாச்சலம், அவரது பாடல்களில் காணப்படும் 'குலாம்' என்ற உருதுச் சொல்லை அடிப்படையாகக்கொண்டு, அவர் 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்திருக்கக்கூடும் எனக் குறிப்பிடுகிறார். அக்காலகட்டத்தில் வேதியர்களின் ஆதிக்கம் பெருகியிருந்ததோடு, வைதீகச் சடங்குகளும் அதிகரித்ததால், மக்களிடையே பிரிவினையும் அறியாமையும் மேலோங்கியிருந்தன. இத்தகைய சூழலில், சிவவாக்கியர் சமூகச் சீர்திருத்த மற்றும் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளைத் தன் பாடல்கள் மூலம் வலிமையாக முன்வைத்தார். பிற்காலச் சமூக சீர்திருத்தவாதிகளால் வலியுறுத்தப்பட்ட பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிரான கண்டனம் போன்ற கருத்துகளுக்கு முதன்முதலாகக் குரல் கொடுத்த பெருமை சித்தர் சிவவாக்கியரையே சாரும். இந்த ஆய்வு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளை அவர் எவ்வாறு தனது பாடல்களில் ஆழமாகப் பதிவு செய்துள்ளார் என்பதைக் கண்டறிகிறது. இந்த ஆய்விற்கான அணுகுமுறையாக பண்புசார் ஆய்வு முறை, விபரண ஆய்வுமுறை மற்றும் பகுப்பாய்வு முறையும் பயன்படுத்தப்பட்டன. இந்த ஆய்வு முதல்நிலைத் தரவுகளான சித்தர் சிவவாக்கியரின் பாடல்களில் சமூக நல்லிணக்கச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் பாடல்கள் அடையாளம் காணப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டதோடு துணைநிலைத் தரவுகளாக இந்தத் தலைப்புக்குத் தொடர்புடைய முன்னைய ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்கள் பயன்படுத்தப்பட்டன. |
en_US |