| dc.description.abstract |
கவிதை என்பது அடிப்படையில் ஒரு மொழிவழிக் கலையாகும். கவிதை என்பது கலையாக
அல்லாமல் அது சமூகத்தின் ஓர் உற்பத்தியாக அமைகின்றபடியால் அது சமூக மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையையும், உணர்வுகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் பிரதிபலித்துக் காட்டுவதாக அமைகின்றது. நவீன இலக்கியப் பயில்பரப்பில் ஒரு பகுதியாக நவீன கவிதையும், நவீன கவிதையின் ஒரு பகுதியாக ஈழத்துத் தமிழ் நவீன கவிதையும் அமைகின்றது. ஈழத்துத்தமிழ் நவீன கவிதையை உருவாக்கிய ஒருவராகக் கவிஞர் ஒளவை விளங்குகின்றார். இவரது படைப்புக்கள் ஏனைய படைப்புக்களிலிருந்து தம்மை வேறு பிரித்துக் காட்டவில்லை. உருவம், உள்ளடக்கம், வெளிப்பாட்டு முறை, வாழ்க்கை பற்றிய நோக்கு மற்றும் உலகம் பற்றிய பார்வையைக்
கொண்டிருக்கிறது. இதனால் ஈழத்துத் தமிழ் நவீன கவிதை வரலாற்றில் அவருக்கு ஒரு
நிரந்தரமான இடம் உண்டு. ஆனால் அவரது படைப்புக்களை முன்னிறுத்திய தனியான ஆய்வுகள் எதுவும் வெளிவரவில்லை. உதிரியான கட்டுரைகள் மற்றும் குறிப்புக்களுக்கு அப்பால் இவரை முன்னிறுத்திக் கோட்பாட்டு ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இவரின் கவிதைகளின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவோ, ஈழத்துத் தமிழக் கவிதை வரலாற்றில் இவரது கவிதையின் தனித்தன்மையைப் புரிந்துகொள்ளவோ முடியாமலிருப்பது இங்கு மிகவும் முக்கியமான ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. ஆகவே ஒளவையின் கவிதைகளை பெண்ணிலைவாத மற்றும் ஆழகியல் விமர்சனக் கோட்பாட்டின் அடிப்படையில் ஆராய்வதன் மூலம் அவரது கவிதைகளின் தத்துவ அடிப்படைகளையும் அழகியல் அடிப்படைகளையும்
வெளிக்கொண்டு வருவதோடு, ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் அவரின் வகிபங்கை மதிப்பிடுவது மற்றும் வரலாற்று நிலைப்படுவதாக இந்த ஆய்வானது அமையப் பெறுகிறது. |
en_US |