Abstract:
இந்த ஆய்வானது குறிப்பாக ஈழத்துத்தமிழ் இலக்கிய மலையகத்து படைப்பாளுமைகளுள் மிக முக்கியமான ஒருவராக வரலாற்றில் நிலைபெறும் குறிஞ்சித்தென்னவனின் கவிதைகளினூடாக வெளிப்பட்டு நிற்கும் சமூக, பண்பாட்டு, தத்துவ மற்றும் அழகியல் அடிப்படைகள் குறித்து ஆராய்கின்றது. காலனித்துவ வருகையின் பின் உருவான இலங்கையின் பண்பாட்டுப் பிராந்தியங்களில் ஒன்றாக மலையகம் விளங்குகின்றது. இலங்கையின் அரசியல், சமூக,பொருளாதார மற்றும் பண்பாட்டு வரலாற்றை உருவாக்கியதில் மலையகத்திற்கு கணிசமான பங்குண்டு. ஆனால் அது வரலாற்றில் ஓரப்படுத்தப்பட்டுள்ளதுடன் சுமார் 200 ஆண்டு கால அடிமைச்சுமையிலிருந்து அது விடுபடவும் இல்லை. இந்த அடிமைத்தன ஒடுக்குமுறைக்கு எதிரான படைப்புநிலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களுள் மிகவும் முக்கியமான ஒருவராக சி. வி வேலுப்பிள்ளைக்கு அடுத்தப்படியாக குறிஞ்சித்தென்னவன் இனங்காணப்படுகின்றார். ஆனால் இவரது படைப்புகள் குறித்து, அவற்றினூடாக மேற்கிளம்பும் கருத்துநிலைகள் குறித்தும் விரிவான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இவரது படைப்புகள் அவற்றின் தத்துவ மற்றும் அழகியல் அடிப்படைகள் குறித்தோ, அல்லது உலகம் பற்றியும் வாழ்க்கைப் பற்றியும் இவரது நிலைப்பாடுகள் குறித்தோ சரியாக விளங்கிக்கொள்ளமுடியாமற் போகிறது. ஈழத்துத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் மலையகத்தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவரது வகிபங்கினை மதிப்பிடுவதும் வரலாற்று நிலைப்படுத்துவதும் மிகவும் முக்கியமான பிரச்சனையாக மேலெழுகின்றது. ஆகவே இவரது படைப்புக்களை பண்புசார் முறையில் விமர்சனக் கோட்பாட்டு ரீதியாக ஆராய்வதன் மூலம் இவரது படைப்புகளின் சமூக, பண்பாட்டு மற்றும் அழகியல் முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதுடன் வரலாற்று நிலைப்படுத்துவதாகவும் இந்த ஆய்வு அமைகிறது. ஒரு வகையில் மலையக மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அறிவார்ந்த ஒரு பங்கினை இந்த ஆய்வு வகிக்கின்றது எனலாம்.