| dc.description.abstract |
ஈழத்தின் இனப்பிரச்சினையின் முகிழ்ப்பாக வெளிவந்த கவிஞர்களில் சேரன் முதன்மையானவர். இவர் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும், போரின் முடிவிற்குப் பின்னரான காலத்திலும் தன் கவிதைகளை எழுதியுள்ளார். போரின் எழுச்சிக் காலங்களில் அவருடைய கவிதைகள் பேசப்பட்டதனைப் போலவே போரின் முடிவின் பின்னரான காலங்களிலும் அவரால் எழுதப்பட்ட கவிதைகள் கவனிப்பைப் பெற்றுக்கொண்டன. அந்தவகையில் அவருடைய ‘காடாற்று’ என்னும் கவிதைத் தொகுதி மிகவும் பிரபல்யம் மிக்கதாகும். இதே போன்று அவரால் வெளியிடப்பட்ட ‘காஞ்சி’ என்னும் கவிதைத் தொகுதியும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இக் கவிதைத் தொகுதி
போர், வாழ்க்கை நிலையாமை, வாழ்க்கை பற்றிய எண்ணக்கருக்களை உள்ளடக்கியதாக 102 கவிதைகளைக் கொண்ட ஒரு தொகுதியாகும். ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகள் எழுதும் கவிஞர் சேரனின் கவிதை எடுத்துரைப்பு முறைகள் மற்றும் அவற்றினை உணர்த்தும் முறைகள் என்பன காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ளன. எனினும் அரைநூற்றாண்டு காலமாக எழுதிவரும் அவரது கவிதைகள் பற்றிய ஆய்வுகள் ஏராளமாக இடம்பெற்ற போதிலும் அவரது எழுத்து முறையின் பரிணாமத்தைத் தெளிவுபடுத்தும் ஆய்வுகள் எதுவும் அதிகம் இடம்பெறவில்லை. இதுவே மிக முக்கியமான ஆய்வுப் பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ளது. அந்தவகையில் இறுதியாக வெளிவந்த அவரது ‘காஞ்சி’ என்னும் தொகுதியினை எடுத்துரைப்பியல் அணுகுமுறையினை அடிப்படையாகக்கொண்டு ஆராயப்படுகிறது. அதற்கு அனுசரணையாக விவரணம், பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு முறையியல் என்பனவும் பயன்படுத்தப்படுகின்றது. அவரது ஆளுமையை மதிப்பிடும் ஒரு கருவியாகவும், ஈழத்து அரசியல் கவிதையின் பரிணாமத்தை விளங்கிக்கொள்ளும் இன்னொரு குறுக்கீட்டுப் பார்வையாகவும் எடுத்துரைப்பியல் நோக்கில் இக்கவிதையினை மதிப்பிடுவதாகவும் இந்த ஆய்வு அமைகின்றது. இதனூடாக சேரனின் ஆரம்பகாலக் கவிதைக்கும் தற்காலக் கவிதைக்கும் இடையிலான இடைவெளிகளையும் ஒத்துணர்வுகளையும் இனங்காணல், அவரது கவிதைகளின் பொருண்மைகளையும் எடுத்துரைப்பு உத்திகளையும் இனங்காணல், ‘காஞ்சிக்’ கவிதைத் தொகுதியில் நவீன கவிதையின் அழகியல் அம்சம் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதனை நோக்குதல், சங்கப் புறத்திணை மரபின் செழுமையினை எவ்வாறு ஈழத்து நவீன கவிதைகள் கொண்டிருக்கின்றன என்பவற்றிற்கு விடை தேடுதலை ஆய்வு நோக்கங்களாகக்
கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. |
en_US |