Abstract:
இருநூறு வருட கால வரலாற்றையும் வலிகளையும் கொண்ட சமூகம் மலையகம். மலையக
சமூகத்தின் துயர்மிகு வாழ்க்கைக் கோலங்களையும் அவர்களது வரலாற்றையும் ஒடுக்கு
முறைகளையும் புலமைச் சிரத்தையுடன் அணுகி ஆராய்ந்து வரலாற்று நிலைப்படுத்தும்
முயற்சிகளை மேற்கொண்ட மலையக இலக்கிய ஆளுமைகளுள் மிக முக்கியமான ஒருவராக சி. வி. வேலுப்பிள்ளை விளங்குகின்றார். இவர் இலக்கியம், அரசியல், தொழிற்சங்கப் பிரதிநிதி. பத்திரிகைத்துறை எனப் பல்துறையிலும் ஆளுமை கொண்டவர். இவரது படைப்புக்களில் “வீடற்றவன்” நாவலில் ஒடுக்கப்பட்ட மலையக மக்களின் துயர்மிகு வாழ்க்கை பின்னணியும் ஒடுக்குமுறைக்கு எதிரான அவர்களின் எதிர்வினைகள் எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதையும் ஆய்வுப் பிரச்சினையாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனது வீடற்றவன் நாவல் மூலம் ஒரு சமூகத்தின் ஒடுக்குமுறைச் சூழலின் பிரதிநிதியாகவும் ஒடுக்குமுறைக்கு எதிரான பிரதிநிதியாகவும் இவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். மலையக மக்களின் பிரச்சினைகள், ஒடுக்குமுறைகள், அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக செயல்படும் விதம் என்பன சமூகத்தில் எடுத்து நோக்கப்பட வேண்டிய காலத்தின் தேவையாக உள்ளது. மலையகச் சமூகத்தில் முதலாளித்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளும், அதற்கு எதிராகத் தொழிற்சங்கம் செயற்பட்ட விதமும் உள்ளடங்கியதாகவே இவரது வீடற்றவன் நாவல் அமைந்துள்ளது. இந்த
ஆய்வானது சி. வி. வேலுப்பிள்ளையின் வீடற்றவன் நாவலை முன்னிறுத்தி அவரது நாவலின்
தனித்தன்மைகளையும் கருத்துநிலைத்தளம் மற்றும் அவரது தனித்துவமான உத்திமுறை மூலம் நாவலில் வெளிப்படும் அழகியல் அம்சங்கள் குறித்தும் ஆராய்வதாக அமைந்துள்ளது. இந்த ஆய்வு பண்புசார் ஆய்வாக அமைந்துள்ளது. மதிப்பீட்டு அணுகுமுறையின் அவரது நாவலில், ஏனைய படைப்புக்களில் வெளிப்படும் ஒடுக்குமுறை அம்சங்களையும் புதிய முயற்சி ஒன்றினைத்த துணிகரமாக முன்னெடுத்த அவரது ஆளுமையினையும் ஆராய்வதனூடாக ஈழத்து நாவல் வளர்ச்சியில் அவரது நாவல் பெறும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளமுடியுமாக உள்ளதோடு அவரது ஈழத்து மலையக மக்களின் துன்பியல் நிலை வெளிப்படுத்துவதில் நாவல் இலக்கியத் துறையின் பங்களிப்புக்களையும் இனங்காணமுடிகின்றது.