| dc.description.abstract |
ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டுச் சமூக இனக்குழுக்களுள் தனித்துவமான பண்பாட்டு மற்றும் கலை அடையாளத்தினைக் கொண்டு வாழும் இனக்குழுவாக பறைமேள ஆற்றுகைச் சமூகம் விளங்குகின்றது. வரலாற்றுக் காலம் முதல் தமிழ்ச்; சமூகத்தின் போக்கையும் அதன் தனித்துவப் பண்புகளையும் தீர்மானிப்பதில் இச்சமூகம் கனிசமான ஒரு பாத்திரத்தை வகித்து வந்தது. அதேபோன்று ஈழத்துக் கலைப் பண்பாட்டு வரலாற்றைக் கட்டமைப்பதில் இதற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. ஆனால் உடன் நிகழ்காலத்தில் ஏற்பட்டு வருகின்ற அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் இச்சமூகத்தின் இருப்புப் பற்றிய கேள்விகளை உருவாக்கியதோடு அச் சமூகத்தை வரலாற்றின் விளிம்பு நிலைக்கும் தள்ளிவிட்டன. இதனால் இன்று பறையர் சமூகம் சமூகப் படிநிலையில் ஓரப்படுத்தப்பட்ட இனக்குழுவாக அடையாளப்படுத்தப்படும் ஒரு வரலாற்று நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. இது மட்டக்களப்புப் பிரதேசத்தின் குறிப்பாக ஆரையம்பதி மற்றும் களுதாவளைப் பிரதேசங்களில் வாழும் பறைமேள ஆற்றுகைச் சமூகத்திற்கும் பொருந்தி வருவதாக அமைகின்றது. இன்று இச்சமூகம் சமூக படிநிலையில் ஓரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் உள்ளமையினால் இதன் கலை மற்றும் பண்பாட்டு வரலாறுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதே மிக முக்கியமான ஆய்வுப் பிரச்சினையாகும். இப்பறைமேள ஆற்றுகை சமூகத்தினது கலை மற்றும் பண்பாட்டு வரலாற்றினை ஓரப்படுத்துவது ஈழத்துத் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். எனவே ஆரையம்பதி மற்றும் களுதாவளைப் பிரதேச பறைமேள ஆற்றுகைச் சமூகத்தினை சமூகவியல் மற்றும் இனவரைவியல் முறையிலான கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகி ஆராய்ந்து பறைமேள ஆற்றுகைச் சமூகத்தினதும், பறைமேளக் கலையினதும் தற்கால நிலையினையும், பிரச்சினைகளையும், அதற்கான காரணங்களையும் கண்டறிந்து அக்கலையினை எதிர்காலத்தில் தொடர்ச்சியாக பறைமேள ஆற்றுகைச் சமூகத்தின் கலைப் பண்பாட்டு வரலாற்றில் வளர்த்தெடுப்பதற்கும், அக்கலையைத் தொடர்ந்து ஆற்றுகை செய்வதற்கும், அதனுடைய பேண்தகு நிலைமைகளை உருவாக்குவதற்குமான கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த அடிப்படைகளை உருவாக்குவதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாகும். ஓர் அடையாள நெருக்கடியை எதிர்கொள்கின்ற சமூகம் தனது விடுதலைக்காக போராடுகின்ற போராட்டத்தின் ஓர் அறிவார்ந்த பகுதியாக இவ் ஆய்வு அமைய வாய்ப்புள்ளது. |
en_US |