Abstract:
தங்களது மரபு சார்ந்த விடயங்களினை பல தசாப்தங்களாகப் பேணி பாதுகாத்து இன்றுவரையிலும் கடைப்பிடித்து வருவதில் மலையக மக்கள் தனித்துவமானவர்களே. அவர்களுக்கே உரித்தான வாழ்வியல் ஒழுங்குகளை வடிவமைத்து பேணி பாதுகாத்து வருகின்றனர். மரபு அல்லது வழக்கம் எனப்படுவது நமது முன்னோர்கள் அல்லது நமது பெற்றோர்களின் வழி இருந்து சந்ததியினருக்கு கடத்தப்படுகின்ற இயல்புகள் ஆகும். அதுபோலவே இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்ட மலையக மக்கள் இன்றுவரையிலும் தாம் சுமந்து வந்த இந்திய மரபுகளைப் பின்பற்றி வருகின்றனர். மலையகத்தில் நிலைகொண்டுள்ள இந்திய மரபுகளை அடையாளப்படுத்தி அவற்றின் தனித்துவ
அம்சங்களை வெளிக்கொணர்வதும் அம்மரபுகள் மலையக சமூகத்தை எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பன பற்றியும் அறிந்திருத்தல் வேண்டும். மலையகத்தின் கேகாலை பிரதேசத்தில் வாழ்கின்ற இந்தியத் தமிழர்கள் பின்பற்றுகின்ற மரபுகள் யாவும் இந்தியாவின் தமிழகத்தை ஒத்ததாகவே காணப்படுகின்றன. இப்பிரதேசமானது அதிக அளவில் சிங்கள மக்களை உள்ளடக்கிய பிரதேசமாக விளங்குகின்றது. இருப்பினும் இங்கு வாழ்கின்ற தமிழ் மக்கள் தனது அடையாளங்களைப் பேணிப் பாதுகாப்பவர்களாகவே காணப்படுகின்றனர். வாழ்வியல் சடங்குகள், வழிபாட்டு முறைகள், நிகழ்த்துக் கலைகள், மொழி என்பன பெரும்பாலும் இந்திய மரபை தழுவியனவாகவே காணப்படுகின்றன. 200 வருடங்களாக இவர்கள் தமது கலாசாரங்களையும் பண்பாடுகளையும் பேணிப் பாதுகாத்து வருகின்ற போதிலும் பிறமொழி மக்களின் தாக்கத்தால் சில மாற்றங்களும் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆய்வானது மலையகத்தில் இன்னும் நிலைகொண்டுள்ள இந்திய
மரபுகளை அடையாளப்படுத்தி அவை எவ்வாறு இந்திய மரபுகளுடன் தொடர்புபட்டு வருகின்றன என்பது தொடர்பாக ஆராய்வதாக உள்ளது. இந்த ஆய்வினை மேற்கொள்வதற்கு பகுப்பாய்வு முறையியல் விபரண முறையியல் மற்றும் ஒப்பீட்டு முறையியல் என்பன பயன்படுத்தப்பட்டுள்ளன.