Abstract:
இந்த ஆய்வானது தமிழ் முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களான குருணாகல், புத்தளம், மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, காலி ஆகியவற்றில் பயின்று வரும் நாட்டார் நடன (Folk dance) வகைகளுள் ஒன்றான ‘களிகம்பாட்டம்’ குறித்ததாக அமைகிறது. இப் பிரதேசங்களுக்கென தனித்துவமான நாட்டார் கலை பண்பாட்டு மரபுகள் உண்டு. அதனை வளர்த்தெடுத்தவர்களுள் முக்கிய பங்காளிகளாக தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் இனங்காணப்படுகின்றனர். முஸ்லிம்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் வளர்த்துக் கொள்வதற்கான மூலாதாரங்களில் ஒன்றாக இக்கலை விளங்கினாலும் உடன்நிகழ்காலத்தில் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி மற்றும் மதம் சார்ந்த சிந்தனைகளில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்கள் இக்கலை பற்றிய கேள்விகளை உருவாக்கியுள்ளது. இதன் அழிவு வெறும் கலையின் அழிவாக மட்டும் கொள்ளமுடியாது. அது சமூகத்தின் அழிவாகவும் பார்க்கப்பட வேண்டும். ஆனால், இதுவரையில் கோட்பாட்டு நிலைப்பட்ட முழுமையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே, இந்தக் கலை வடிவத்தினுடைய அடிப்படைகள், அதன் சமூக முக்கியத்துவம், அதில் ஏற்பட்டு வருகின்ற நிலைமாற்றங்கள், அதனை உந்து தள்ளிய காரணிகள் முதலியவற்றை இனங்கண்டு திரைவிலக்குவதன் மூலம் எதிர்காலத்தில் அந்தக் கலையின் இருப்பு பற்றிய பேண்தகைமையினை உருவாக்குவதற்கான கோட்பாடு மற்றும் நடைமுறை சார்ந்த புலமைத் தலையீட்டினை மேற்கொள்வதே இவ் ஆய்வின் பிரதான நோக்கமாகும். இந்த ஆய்வு நாட்டார், பண்பாட்டு மற்றும் அழகியல் கோட்பாடுகளை அடிப்படையாகக்கொண்ட பண்புசார் ஆய்வாக முன்னெடுக்கப்படுகிறது.