Abstract:
பார்வையாளர்களின் உணர்வுகளையும் சிந்தனைகளையும் உணர்த்தும் கலைவடிவங்களுள் ஒன்றான நாடகமானது, கேட்பதை விட பார்ப்பதில் தான் பார்வையாளர்களை அதிகமாக ஈடுபடுத்தும். காண்பியம் என்பது அரங்கில் கட்புலனாகின்ற நடிகன், ஆற்றுகைவெளி, காட்சியமைப்பு, வேட உடை, ஒப்பனை, அரங்கப்பொருள், ஒளி போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாகும். காண்பியங்கள் ஆற்றுகை ஒன்றின் வரலாற்றுப் பின்னணி, சூழல் மற்றும் பாத்திர உருவாக்கம், மனநிலை, பண்பாடு, போன்றவற்றைப் பிரதிபலிப்பதுடன் பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் காண்பியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஆற்றுகைகளில் முக்கியமாக திருமறைக்கலாமன்றம் தயாரித்து வழங்கும் இயேசுவின் திருப்பாடுகளைக் குறிக்கும் ஒரு தவக்கால ஆற்றுகையாகும். இந்த ஆய்வானது, பாஸ்க்கு ஆற்றுகையின் எழுத்துருவில் காண்பியங்கள் தெரிவு செய்யப்படும் முறை மற்றும் காண்பியங்களின் உருவாக்க படிமுறை, மற்றும் பாஸ்க்கு ஆற்றுகைகளின் காண்பியங்கள் உரோம் காலத்தினை எவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துகின்றது எனும் பிரதான நோக்கத்தினையும் அதற்கான ஆதாரங்களை கிளறுதல் போன்ற உப நோக்கங்களையும் கொண்டுள்ளது. காண்பிய வடிவமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு பண்பு சார்ந்த அணுகு முறையிலேயே காண்பியங்கள் எவ்வாறு பனுவலுக்கேற்ப திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்படுகின்றன? ஆற்றுகை ஒன்றில் காண்பியங்கள் எவ்வாறு செயற்படுகின்றன? காண்பியங்களின் உருவாக்க படி முறை? காண்பியங்கள் ஆற்றுகைக்கு எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றன? என்னும் ஆய்வு வினாக்களைக் கொண்டு இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. திருமறைக்கலாமன்ற பாஸ்கா நாடகங்களின் அரங்கக் காண்பியங்கள் கதையோடு இணைந்து கதை சொல்லலை மேற்கொண்டு உரோம் காலத்தின் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை பிரதிபலிக்கின்றன. உடை அலங்காரங்கள், மேடை அமைப்பின் கூறுகள், மற்றும் சில அரங்கப் பொருட்கள் போன்றன அக்காலத்திய சூழலை உருவாக்க முயற்சிப்பதைக் காணமுடிகிறது. இருப்பினும், முழுமையான வரலாற்றுத் துல்லியத்தை அடைவதில் உள்ள இயல்பான சவால்களும், காலனித்துவ கலப்புகளும், நாடகத்தின் கலைத்துவ வெளிப்பாட்டிற்கான தேவைகளும் ஆற்றுகையில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆயினும் கதைநகர்விற்கும் காண்பிய வடிவமைப்புகளுக்கும் இடையே ஓர் ஆழமான மற்றும் பிரிக்க முடியாத ஊடாட்டம் உள்ளது என்பதனைக் காணமுடிகின்றது. எழுத்துருவில் உள்ள காண்பிய வடிவமைப்பிற்கான சாத்தியப்பாடுகள் கலைஞர்களின் கற்பனைக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ப தொடர்ந்து விரிவடைந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.