Abstract:
தொன்றுதொட்டு நமது முன்னோர்களின் பாரம்பரியங்கள் தலைமுறைவழியாக கடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடத்தப்பட்டு வருகின்ற நாட்டார் கலைவடிவங்களில் தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஆற்றுகைவடிவமாகக் கும்மி காணப்படுகின்றது. பெண்கள் இணைந்து வட்டமாக கைகளைத்தட்டி ஆடுகின்ற கும்மி நடனம் பற்றியும் அதன் அரங்குசார் நுட்பமுறைகள், கதைசொல்லல் முறை போன்றவற்றினை கண்டறியும் வகையில் இந்த ஆய்வானது விரிவாக ஆராய்கின்றது. இத்தகைய வடிவங்களில் காணப்படும் நுட்பமுறைகள் சமகால அரங்கில் எவ்வாறு பங்கினை வகிக்கமுடியும் என்ற ரீதியில் இவை தொடர்பாக நேர்காணல்கள், கள ஆய்வு, நேரடி அனுபவம் போன்ற முதலாம்நிலைத் தரவுகள் மூலமாகவும் ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட தகவல்களை இரண்டாம்நிலைத் தரவுகளாகவும் கொண்டு பண்புசார் அணுகுமுறையில் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.; ஆய்வு வினாக்களாக கும்மியாற்றுகையில் கதைசொல்லும் முறைமையில் உள்ள ஐதீகம்சார் கதைகள் எவ்வாறு சொல்லப்படுகின்றன? கும்மியாற்றுகையின் ஆட்ட வகைகள் எவை? அவை ஆடப்படும் விதம் யாது? கும்மிப்பாடல்கள் பாடப்படும் விதம் யாது? கும்மியில் பயன்படுத்தப்படும் வேட உடைகள் ஒப்பனைகள் எவை? கும்மியாற்றுகை நிகழ்த்தப்படும் வெளி எவ்வாறு அமைந்திருக்கும்?; போன்றன காணப்படுகின்றன. கும்மியில் சமகால அரங்கநுட்ப முறைகள் பயன்படுத்தப்படவில்லை என்பது இந்த ஆய்வின் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. ஆய்வின் நோக்கமாக கும்மியாற்றுகையிலுள்ள அரங்கியல் மற்றும் கதைசொல்லல் நுட்பமுறைகளினைக் கண்டறிந்து சமகால அரங்கில் இத்தகைய நுட்பமுறைகளைப் பயன்படுத்தலாம் என்ற வகையிலும் அரங்குசார் நுட்பமுறைகள் மற்றும் கதைசொல்லல்முறை போன்றவற்றினைக் கண்டறியும் வகையில் இந்த ஆய்வானது விரிவாக நோக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்டறிவதனூடாக பாரம்பரிய கலைகளின் நிலைத்திருப்பினைப் பேணுவதற்கும்,எதிர்கால சந்ததியினருக்கு இப்பாரம்பரியங்கள், பண்பாடுகள் கடத்தப்படலாம்.