Abstract:
காலனிய கால நவீனக்கல்வியின் வழி ஆங்கில இலக்கிய மரபு தமிழுக்கு அறிமுகமாகின்றது. இதன் வழியே தான் நவீன புனைவு இலக்கியங்கள் தமிழில் தோற்றம் பெறுகின்றன. அந்தவகையில் சிறுகதை நாவல் எனும் வடிவங்கள் தமிழில் செல்வாக்கு பெறுகின்றன. 20ஆம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் 21 ஆம் நூற்றாண்டிலும் தமிழில் செழுமை மிக்க புனைவு இலக்கியத்தைத் தருகின்ற ஒருவராக ஜெயமோகன் அடையாளப்படுத்தப்படுகின்றார். அவருடைய எழுத்துக்கள் இந்திய மரபில் காலூன்றி நிற்பவையாகக் காணப்படுகின்றன. அவை கருத்து முதல்வாத தளத்துக்கு
தனித்துவமான இடத்தை வழங்கி வருவதை அவதானிக்க முடிகின்றது. ஜெயமோகனின் புனைவு இலக்கியமானது இந்திய மெய்யியல் கருத்துக்களை கொண்டமைந்தவையாக விளங்குகின்றன. அதன் அடிப்படையில் ஜெயமோகனின் படைப்புக்களில் வைதிக, அவைதிக தரிசனங்களை முன்னிறுத்தியே இந்திய மெய்யியல் சிந்தனையானது விளக்கப்படுகின்றது. அவை நவீன சிந்தனையுடனும் மனிதவியல் உணர்வுகளுடனும் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளன என்பதை வெளிப்படுத்துவதாகவும் விளங்குகின்றன. ‘விஷ்ணுபுரம்,’ ‘திசைகளின் நடுவே’ போன்ற ஜெயமோகனின் புனைவுகள் ஆய்வு எல்லையாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஜெயமோகன் தனது புனைவுகளில் அதீதமாக இந்திய மெய்யியல் சிந்தனைகளைக் கொண்டு வருகின்ற ஒருவராக விளங்குகிறார். அந்த அடிப்படையில் அவரது புனைவு இலக்கியங்களில் இந்திய மெய்யியற் சிந்தனைகள் எந்த வகையில் வெளிப்படுத்தப்படுகின்றன. அவற்றின் தாற்பரியம், வெளிப்பாட்டு முறை மற்றும் அதனுடைய நவீனவாக்கப் பெறுமானம் என்பனவே இங்கு ஆய்வுப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது ஜெயமோகனின் எழுத்து
எவ்வளவு தூரம் இந்திய மெய்யிலுக்கும் தமிழ் பாரம்பரியத்திற்கும் இடையில் ஓர் உறவை
ஏற்படுத்துகிறது என்ற அறிதலைப் பிரதான ஆய்வு நோக்காகக்கொண்டுள்ளதோடு, இந்திய
மெய்யியலில் நவீனவாக்கம் தமிழில் செலுத்துகிற செல்வாக்கை அறிதல் இவ்வாய்வின் துணை நோக்கமாகும். இவ்வாய்வில் விபரண ஆய்வு, வரலாற்று ஆய்வு, மற்றும் தேவைப்படும் இடங்களில் பகுப்பாய்வு முறை என்பன பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆய்வானது இந்திய மெய்யியலில் உள்ள கருத்துக்களை தற்கால சூழலுக்கும் உலகிற்கும் பொருத்தமானதாக மாற்றி அமைக்கும் புதிய சிந்தனைகள் உருவாகுவதும், தத்துவங்கள் நவீன யதார்த்தங்களுக்கு இடையிலான பாலமாக செயல்பட்டு இலக்கியத்தின் பலதரப்பட்ட பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள உதவும். இதன் வழி ஜெயமோகன் படைப்புக்களை ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளர்களுக்கும் ஜெயமோகனின் புனைவுகளில் இந்திய மெய்யியல் சிந்தனைகள் பெறும் இடத்தை அறிய விரும்பும் ஆய்வாளர் ஒருவனுக்கும் வழிகாட்டியாக அமையும் என நம்புகிறேன்.