Abstract:
இலங்கையின் முப்பது வருட உள்நாட்டுப் போரின் பிரதான உற்பத்திகளில் ஒன்றாக இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் மேற்கிளம்பியுள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அவுஸ்ரேலியக் கண்டங்களிலுள்ள தமிழ் புலம்பெயர்ந்த சமூகங்கள் முற்றிலும் வேறுபட்ட பண்பாட்டுச் சூழலினுள் தனி மற்றும் குழு அடையாளத்தை தக்கவைக்கப் பல்வேறு வழிகளில் பாடுபட்டு வருகின்றன. பொதுவாக புலம்பெயர் சமூகங்களின் கலை முயற்சிகள்; பண்பாட்டு அடையாளத்தைத் தக்கவைப்பதற்கான அல்லது கட்டமைப்பதற்கான செயற்பாடுகளாக அமைவதை பல அண்மைக்கால அூய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இருப்பினும் இலங்கைத் தமிழ் புலம்பெயர் சமூகங்களில் சமகாலக் காண்பியக்;கலைப் பயில்வுகள் பற்றிக் குறிப்பிடும்படியான ஆய்வுகள் இதுவரை வெளிவரவில்லை. அந்தவகையில் உலகெங்கிலும் சிதறுண்டுபோயுள்ள தமிழ் புலம்பெயர் காண்பியக் கiலைஞர்களின் படைப்புகளைத் தொகுத்து நோக்கவும் அவர்களின் அடையாளம் பற்றிய கருத்தாடல் வெளியாக அவர்களது படைப்புக்களை வாசிக்கவும் இவ்வாய்வு முயல்கிறது. பொருளாதாரம், கல்வி, திருமணத் தொடர்பு, போர் என்ற நான்கு காரணங்களின் அடிப்படையில் முதலாம் தலைமுறையினைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் புலம்பெயரிகள் தாயகத்தை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இரண்டாம் தலைமுறையினர் புலம்பெயர் நாட்டிலே பிறந்து அங்கேயே வளர்ந்து வருகின்ற தலைமுறையாகும். அந்தவகையில் அடையாளச்சிக்கலை இவ்விரு தலைமுறையினரும் வெளிப்படுத்துவதிலுள்ள வேறுபாடுகளை இ;வ்வாய்வு நுணுகி நோக்குகிறது. அந்தவகையில் முதலாம் தலைமுறையினர் தாயகம் பற்றிய நினைவுகள், கற்பனைகள், இழப்பு, போர், இடப்பெயர்வின் வலி, அகதி வாழ்க்கை போன்ற உள்ளடக்கங்களைப் படைப்பில் வெளிப்படுத்த இரண்டாம் தலைமுறை இரட்டை அடையாளம், பண்பாட்டுக் கலப்பு, கலாச்சாரக் கலப்பு, இடப்பெயர்வு, இலங்கையின் அரசியல் விடயம் போன்றவற்றைப் படைக்கின்றனர். இவ்வாறு முதலாம், இரண்டாம் தலைமுறைக் காண்பியக் கலைஞர்களின் படைப்புக்களினை ஒப்பீட்டுப் பகுப்பாய்வு செய்கின்ற போது முதலாம் தலைமுறையினைச் சேர்ந்த கலைஞர்கள் எப்பொழுதும் தங்களது சொந்த தேசமாக இலங்கையினைக் கருதுகின்ற அதேவேளை இரண்டாம் தலைமுறையினர் புகலிடம், தாயகம் என்ற இரண்டினையும் தங்களது தேசமாகக் கருதுகின்றனர். ஆகவே முதலாம் தலைமுறையினர் புகலிடத்தில் அடையாளச் சிக்கலுக்கு உட்படுவதனைக் காட்டிலும் இரண்டாம் தலைமுறையினர் அதிகமாக அடையாளச் சிக்கலுக்கு உட்படுகின்றனர் என்பதைப் படைப்புக்களின் உள்ளடக்கப் பகுப்பாய்வின் ஊடாக இ;வ்வாய்வு இனங்காண முயல்கின்றது. இதற்காக அடையாளம் என்றால் என்ன? அடையாள உருவாக்கமும் கலையும் எப்படித் தொடர்புபடுகின்றது? ஈழத்தமிழ் புலம்பெயரிகள் தங்களது அடையாளத்தை நிறுவிக்கொள்ள ஏன் முயற்சி செய்கின்றார்கள்? புலம்பெயர் தமிழ் கலைஞர்களின் அடையாள உருவாக்கத்தில் தாயகம், புகலிடம் என்பவற்றுடன் எவ்வாறான முறைகள், சந்தர்ப்பங்கள் ஊடாக தொடர்பினை ஏற்படுத்துகின்றனர்? நேரடியாகப் போரினால் இடம்பெயர்ந்த கலைஞர்களும் புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்த இரண்டாம் தலைமுறையினரும் கலையினை வெளிப்படுத்துவதில் எப்படி வேறுபடுகின்றனர்? போன்ற வினாக்களுக்கு விடை காண இவ்வாய்வு முயல்கிறது. இனவரைவியல் மற்றும் விளக்கவியல் சார் ஆய்வு முறைகளைப் பின்பற்றிக் கருத்தாடல் மற்றும் உருவ உள்ளடக்கப் பகுப்பாய்வு முறைகளினூடும் இவ்வாய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு கலையின் சமூக வரலாறு மற்றும் உருவவாதம், குறியீட்டியல் போன்ற கலைவரலாற்று ஆய்வு அணுகுமுறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.