Abstract:
மாணவர்களின் வாழ்விற்கு வலுவூட்டும் பாடங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த பாடமான மனைப்பொருளியலில் உள்ளடங்கும் தையல் பகுதியானது, மாணவர்களின் தையல் சார் அறிவு மற்றும் தையல் திறன்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான பாட விடயங்களையும் செயல்முறைப் பயிற்சிகளையும் உள்ளடக்கப்பட்ட அலகாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் இவ் ஆய்வானது மனைப்பொருளியலில் உள்ளடங்கும் தையல் பாடப்பகுதிக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பற்றி ஆராயும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பதுளை தமிழ் பாடசாலைகளில் சாதாரணதரத்திலும் உயர்தரத்திலும் மனைப்பொருளியல் பாடத்தினை பயிலும் 82 மாணவர்களில், 30 மாணவர்கள் எழுமாற்று மாதிரி தெரிவின்
ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் 5 மனைப்பொருளியல் கற்பிக்கும் ஆசிரியர்களும் மாதிரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வாய்விற்கான முதலாம் நிலை தரவுகள் வினாக்கொத்து, நேரடி அவதானம், நேர்காணல், கலந்துரையாடல் மூலமாகவும், ஆய்வறிக்கைகள், நூல்கள் போன்ற இரண்டாம் நிலை தரவுச்சேகரிப்பு முறைகளின் ஊடாகவும் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்ட அளவு சார் மற்றும் பண்புசார் தரவுகள், அளவு சார் விபரணப் பகுப்பாய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் ஊடாக, பதுளை தமிழ் பாடசாலைகளில் மனைப்பொருளியல் பாடத்தினை குறைந்த அளவு மாணவர்களே தெரிவு செய்து கற்கின்றமையும், மனைப்பொருளியலின் தையல் பகுதிக்கான செயற்பாடுகளை மாணவர்கள் செயல்முறைகள் ஊடாகக் கற்கின்றமையும், தையல் பாட கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளுக்கான வளப்பற்றாக்குறைகள் காணப்படுகின்றமையும் இனங்காணப்பட்டுள்ளன. எனினும் தையல் பகுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சில தையல் செயல்முறை பயிற்சிகள் ஊடாக மாணவர்களின் குறிப்பிட்ட சில தையல் திறன்கள் வளர்க்கப்பட்டுள்ளன என்பதையும் அறியக்கூடியதாக இருந்தது. சில வளப்பற்றாக்குறைகள் காணப்பட்ட போதிலும் மனைப்பொருளியலில் தையல் பகுதியின் கற்பித்தல் மற்றும் கற்றல் செயற்பாடுகள் முன்னேற்றத்தையேக் காட்டுகின்றன எனினும் தையல் பாடப்பகுதியினை செயன்முறைகளுடன் கற்ற மாணவர்கள் அன்றாட வாழ்வில் தமக்கான தையல்த்தேவைகளைத் தாமே நிறைவேற்றிக்கொள்வதனைக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தையல் கற்பித்தலை மேலும் வலுப்படுத்த சில பரிந்துரைகள் செய்யப்படுகின்றன. முதன்மையாக, பாடசாலைகளில் தையல் பாடப்பகுதியினைக் கற்பிக்கத் தேவையான இயந்திரங்கள், துணிகள், கருவிகள் போன்ற வளங்களை போதுமான அளவில் வழங்கப்பட வேண்டும். அதேசமயம், தையல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் முறைகள் தொடர்பான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியமாகும். பாடத்திட்டத்தில் நடைமுறை நேரம் அதிகரித்து, மாணவர்கள் நேரடியாகச் செய்முறை அனுபவங்களைப் பெறும் வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். மேலும், மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தையல் போட்டிகள், கண்காட்சிகள் மற்றும் விருதுகள் வழங்கப்படலாம். உள்ளுர் தையல் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளுடன் பாடசாலைகள் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் சார்ந்த அனுபவம் பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான தனித்த தையல் அறைகள் மற்றும் கற்றல் சூழல் ஏற்படுத்தப்படுவது அவர்களின் கற்றலை மேம்படுத்தும். அத்தோடு, தையல் கையேடுகள் மற்றும் துணை நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் மிகுந்த பங்காற்றுவதால், தையல் பாட கற்றலில் டிஜிட்டல் கருவிகளும் பயன்படுத்தப்படலாம். அத்துடன் மாணவர்களின் கற்றல் முன்னேற்றத்தைத் தொடர்ந்து மதிப்பீடு செய்து, தனிப்பட்ட வழிகாட்டுதல் வழங்கப்படுவதோடு சிறு திட்டப் பணிகள் (project work) மூலம் அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தையல் கற்பித்தலின் தரத்தை மேம்படுத்துவதோடு, மாணவர்கள் தையலை ஒரு பயனுள்ள வாழ்க்கைத் திறனாகக் கற்றுக்கொள்ளும் சூழலை வலுப்படுத்தும்; என பரிந்துரைகள் வழங்கப்பட்டதுடன் எதிர்காலத்தில் இத்தலைப்பு தொடர்பான ஆய்வுகளுக்கான விதப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.