Abstract:
இந்து அறிவியல் புலமானது முறைசார் அறிவியற் கூறுகள், முறைசாரா அறிவியற் கூறுகள் என இருதளங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. அவற்றுள் முறைசார் அறிவியற் கூறுகளுள் ஒன்றாக இன்றுவரை பயிலப்பட்டு வரும் மருத்துவம், ஆயுர்வேதம், சித்த மருத்துவம் என இருபெரும் பிரிவுளாக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றுள் சித்த மருத்துவமானது சித்தர்களால் நெறிப்படுத்தப்பட்ட அறிவியற் பெறுமானமாகும். ஈழத்தின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதிகளில் இவற்றின் செல்வாக்கை அடையாளம் காணலாம். சிறப்பாக வடபகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இம்மரபு சிறப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது. சித்தர்கள் வகுத்தளித்த மருத்துவ நெறிமுறைகளைக் காலங்காலமாகப் பின்பற்றிவந்த வேளை, பிற்காலச் சந்ததியினரால் அவை சித்த மருத்துவப் பனுவல்களாக தொகுக்கப்பட்டன. கைதடி சித்த போதனா வைத்தியசாலையின் தற்கால வளர்ச்சி நிலையை இனங்கண்டு அறிதலும் இன்றைய சமுதாயத்திற்கு சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துதலையும் நோக்கமாகவும் யாழ்ப்பாணத்தில் கைதடி சித்த போதனா வைத்தியசாலை சித்த மருத்துவத்தில் தனித்துவமான வளர்ச்சி நிலையை எய்தியுள்ளது என்பதைக் கருதுகோளாகவும் கொண்டு இந்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சித்த மருத்துவத்தின வளர்ச்சி நிலைகளை இந்த ஆய்வு அணுகுவதனால் இங்கு காணப்படுகின்ற கைதடி சித்த போதனா வைத்தியசாலையை அடிப்படையாகக் கொண்டு இவ் ஆய்வு நிகழ்த்தப்படுகிறது. சித்தர்களின் காலம் தொடர்பாகத் தீர்மானிப்பதில் பல இடர்பாடுகள் ஏற்பட்டன. அதனால் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்வதற்குச் சான்றுகளைத் தேடுவதில் சிரமங்களைளச் சந்திக்க நேர்ந்தன. ஏனைய சித்த வைத்தியசாலைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவது கடினமாக இருத்தது. ஆய்வாளனால் களாய்வு மூலம் பெறப்பட்ட தரவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் கலந்துரையாடல், நேர்காணல்கள், ஒலி பதிவுகள் போன்றனவும் இத்தகைய முதல் நிலை மூலங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வாய்வுடன் தொடர்புபட்ட நூல்கள், ஆய்வேடுகள், சஞ்சிகைகள், இதழ்கள்;, இணையத்தளங்கள் மற்றும் வலை ஒளி ஊடாக பெற்றுக் கொண்ட தகவல்கள் துணை மூலங்களாக உள்ளன. இவ் ஆய்வானது வரலாற்றியல் ஆய்வு, விபரண ஆய்வு , ஒப்பிட்டு ஆய்வு முறையியல் மூலம் இவ் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. கள ஆய்வு மூலம் பெறப்பட்ட தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படவுள்ளது. இந்த ஆய்வானது விபரண ஆய்வு முறையியலை மையப்படுத்தியதாகும். அத்தோடு கள ஆய்வு உத்தி முறைகளினூடாகப் பெறப்பட்ட தரவுகள் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.