Abstract:
சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடப்படும் சமயமாக சைவசமயம் காணப்படுகிறது. சைவசமயமானது பல இனத்தவர் வாழுகின்ற உலக நாடுகளிலும் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கையின் வடபால் யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் சமகாலத்தில் மக்கள் தாம் வாழும் சமூகத்தின் பொருளாதாரம், கல்வி, தொழில், சமயம், வர்க்க அமைப்பு என்பவற்றிற்கு ஏற்ப தங்கள் வாழ்க்கை கட்டமைப்பை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் வலிவடக்குப் பிரதேசத்தில் மக்கள் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், கிரியைமுறைகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் போன்றன தற்காலத்திலும் பின்பற்றப்பட்டு வருகின்றனவா? ஆகமம் சாராத வழிபாட்டு ஆலயங்கள் சமய மேனிலையாக்கம் காரணமாக எவ்வாறு ஆகம முறைக்கு உட்படுகின்றன? சமய மேனிலையாக்கம் காரணமாக சமகாலத்தில் சைவசமய வளர்ச்சிப்போக்கில் ஏற்படும் பாதிப்புக்கள் எவை? போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு இவ் ஆய்வானது ஆராயப்படுகின்றது. குறித்த ஆய்வில் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் உள்ள சைவ ஆலயங்கள் (தெல்லிப்பளை, மாவிட்டபுரம், மல்லாகம், அளவெட்டி, குரும்பசிட்டி) ஆகிய பிரதேசங்களை ஆய்வு எல்லையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அத்தோடு சமய மேனிலையாக்கம் காரணமாக வலிகாமம் வடக்குப் பிரதேச பண்பாட்டுக்கு உரித்தான வழிபாட்டு மரபுகள் அழிவடைந்து செல்வதனை கண்டறிதல் இங்கு ஆய்வுப் பிரச்சினையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது. ஆய்வு நோக்கங்களில் பிரதான நோக்கமானது சமய மேனிலையாக்கம் காரணமாக மாறுபட்டு வரும் கலை, கலாசார குறைகளினைக் கண்டறிந்து பட்டியல்படுத்தல் மற்றும் வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் சமய மேனிலையாக்கம் காரணமாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கண்டறிதல் துணை நோக்கமாக கொள்ளப்படுகின்றது. இவ்வாய்வானது விபரண ஆய்வு, வரலாற்று முறை ஆய்வு, பகுப்பாய்வு, கள ஆய்வில் வினாக்கொத்து, நேர்காணல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலிவடக்கிலே சமய மேனிலையாக்கம் காரணமாக பாரம்பரிய வழிபாட்டு மரபுகள், கலை, கலாசார அம்சங்கள் மாற்றத்திற்கு உள்ளாகி நவீன மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இவற்றிற்கு சில பரிந்துரைகள் வருகின்றன. மறுசீரமைக்கப்பட்ட ஆலய நிர்வாக, திருப்பணி சபைகளை உருவாக்குவதற்கு சைவ சமய செயற்பாடுகளில் சமய ஞானமும், சமூக ஈடுபாடும் கொண்ட முதியவர்கள், பெரியவர்களுடன் ஆசாரமுள்ள பெண்களையும் ஒன்றிணைத்து செயற்படல், சைவ சமய நம்பிக்கைகளை மேம்படுத்தும் வகையிலும் சிறந்த ஒழுக்கம், பண்பாடு போன்றவற்றை வலுப்படுத்தும் நோக்கிலும் விழிப்புணர்வு, கருத்தரங்குகள், ஆன்மீக சொற்பொழிவுகள், சமய பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நடாத்துதல் வேண்டும். ஆலயப் பிணக்குகளை தீர்க்கவும், சைவ மத விரோத செயற்பாடுகளைத் தவிர்க்கவும் நடு தீர்ப்புமையம், சைவமகாசபை, அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை சிறப்பு அம்சமாகும். பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வியில் சைவ சமயக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தல் வேண்டும். அதாவது ஆறுமுகநாவலரும் நாலாம் பால பாடத்தில் சமயமே குழந்தையை நல்லவனாக உருவாக்குவதில் அதிக பங்கை செலுத்துகின்றது. குழந்தையின் நம்பிக்கைக்கு சமயத்தின் தீங்கு வரக்கூடிய வகையில் கல்வி அமையுமானால் கல்வியின் பயன் அற்றுவிடும் என்கிறார். கல்வி அடிப்படையில் அமைதல் வேண்டும் அதிலும் சிறப்பாக மனித விழுமியங்களுடன் கூடிய சைவ சமயக்கல்வியின் ஊடாக நற்பிரஜைகளை உருவாக்கலாம். அதன் மூலம் ஆலயங்களை உரிய முறையில் பரிபாலிக்கலாம். மற்றும் நவீன கால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் இந்து மதக்கருத்துக்கள், வாழ்வியல் சிந்தனைகள் யாவும் நவீன, விஞ்ஞான கொள்கையுடன் இணைந்த வகையில் செயற்படுத்த வேண்டும். இந்த ஆய்வானது சமகால சைவசமய அசைவியக்கத்தில் வலிவடக்குப் பிரதேச பாரம்பரிய வழிபாட்டு மரபுகளை அறிந்துகொள்ளக்கூடியதாக அமையப்பெறுகிறது. அத்தோடு சமய மேனிலையாக்கம் தொடர்பாக ஆய்வு செய்ய விரும்பும் ஆய்வாளருக்கு பயனுள்ளதாக அமையும்.