Abstract:
இலங்கையின் கிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ள மட்டக்களப்பு பிரதேசமானது நாட்டாரியல் வழக்காறுகள் மற்றும் வழிபாட்டு முறைகளில் தனித்துவமிக்கதாக காணப்படுகின்றது. இங்கு வழக்கிலுள்ள புராதான குலக்குழு வழிபாட்டு முறையில் குமார தெய்வ வழிபாடானது வேடுவ சமூகத்தினரால் வேடகலைத் தெய்வங்களுள் ஒன்றாகவும் தற்காலிக வழிபாட்டிடத்தில் கப்புகனாரினால் தெய்வ உரு ஏற்றப்பட்டு மன்றாட்ட முறையில் வேட மொழியிலமைந்த பாடல்களுக்கு கொட்டு எனப்படும் வாத்தியம் இசையமைக்க குறியீடாக ஆயுதங்கள் வைக்கப்பட்டு மடைப்பொருட்களுடன் மரபு ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் வேடுவ சமூகத்திவரிடையே புராதான காலம் தொட்டு பேணப்பட்டு வருகின்ற குமார தெய்வ வழிபாட்டு முறை பற்றி அறிவதை இங்கு முதன்மை நோக்கமாகவும், குமார தெய்வ வழிபாட்டிற்கும் முருக வழிபாட்டிற்குமான உறவு நிலை எத்தகையது என்பதை துணை நோக்கமாகவும், மட்டக்களப்பு பிரதேசத்தினை ஆய்வுத் தளமாகக் கொண்டு சமூக மெய்யியல் நோக்கில் குமார வழிபாட்டினை ஆராய்வதாக இந்த ஆய்வு அமைகின்றது. வேடுவர்களுடைய பூர்வீக வழிபாட்டினுள் குமாரதெய்வ வழிபாடு பெறுகின்ற முக்கியத்துவம், அது முருக வழிபாட்டின் பரவலாக்கத்திற்கு அடிப்படையாக இருந்ததா? அத்தகைய வழிபாடு சமகாலத்தில் எத்தகைய நிலையில் உள்ளது என்பதுதான் ஆய்வுப்பிரச்சினை ஆகும். இதனடிப்படையில் இவ் ஆய்விலே ஆய்வின் அறிமுகத்துடன் மட்டக்களப்பு பிராந்தியமும் அங்கு காணப்படும் நாட்டாரியல் வழிபாடுகள் பற்றியும், வேடுவ சமூகத்தினர் மற்றும் அவர்களுடைய குமார தெய்வ வழிபாட்டினையும் அதன் தனித்துவத்தையும் வெளிப்படுத்துவதாகவும், தொடர்ந்து அச் சமூகத்தின் அசைவியக்கம், மேல்நிலையாக்கத்தின் வழியாக சமூகமெய்யியல் நோக்கில் குமார வழிபாட்டின் இயங்குநிலை தொடர்பாக ஆராய்வதாகவும் ஆய்வின் உப தலைப்புக்கள் அமைகின்றது. இங்கு கள ஆய்வு, விபரண ஆய்வு, வரலாற்று முறை ஆய்வு போன்றன ஆய்வு முறையியல்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிரதேசத்தில் காணப்படும் பூர்வீக இனத்தவர்கள் தொடர்பாகவும் அவர்களின் கிராமிய வழிபாடுகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ள முற்படும் மாணவர்களுக்கும் அதனை இலகுவில் விளங்கிக் கொள்வதற்கும் இவ்வாய்வு துணைபுரிவதுடன் எதிர்காலத்தில் இவை சார்ந்து ஆய்வினை மேற்கொள்ள இருப்பவர்களுக்கு இந்த ஆய்வானது ஒரு வழிகாட்டியாகவும் அமையும்.