Abstract:
மனித வளர்ச்சிப் படிமுறை வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித அறிவின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இவ் ஆய்வில் மனித நாகரிக வளர்ச்சியில் சாதாரண அறிவு, சமயங்களின் தோற்றம், மொழிப் பயன்பாடு, விஞ்ஞான அறிவு, மெய்யியல் அறிவு போன்றவற்றின் வளர்ச்சி நிலைகள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. விஞ்ஞானமும் மெய்யியலும் இணைந்து ஆய்வறிவை தோற்றுவித்தது. தோற்றுவிக்கப்பட்ட ஆய்வறிவானது நூலகம், களஞ்சியப்படுத்தும் கணினி அறிவு மூலமும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இன்று செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது அனைத்து துறைகளையும் ஊடுருவி அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. ஆய்வானது செயற்கை நுண்ணறிவுக்கான அறிமுகம், வகைகள், பயன்பாடுகள், இலக்குகள் பற்றி எடுத்துரைக்கின்றது. மேலும் செயற்கை நுண்ணறிவின் அதிகரித்த பயன்பாட்டால் எதிர்காலத்தில் மனித சிந்தனை, புத்தாக்கத் திறன் போன்றவை அழியக்கூடிய சாத்தியப்பாடுகள் உள்ளன. இப்பிரச்சினையை அடிப்படையாகக்கொண்டு, செயற்கை நுண்ணறிவின் இணையத்தள வசதிகளான ChatGPT, Gemini, Cohere, Copilot, DeepSeek, Claude, Grok, Whisper, Codex, Characte AI போன்றவை பற்றியும் அவற்றின் எதிர்காலப் போக்குகள் பற்றியும் எடுத்துரைத்து, செயற்கை நுண்ணறிவானது மருத்துவம், நிதி, உற்பத்தி, பொழுதுபோக்கு, கல்வி, வணிகம் போன்ற பல துறைகளில் நன்மைகளை ஏற்படுத்தினாலும், இதன் தீமைகளாக வேலையின்மைப் பிரச்சினை, சமூக ஏற்றத்தாழ்வு போன்றவை அதிகரிக்கலாம். AI-இயங்கும் ஆயுதங்கள் உருவாக்கப்படுவதால், போரின் தன்மை மாறி, புதிய நெறிமுறை கேள்விகள் எழுவது பற்றியும் விளக்குவது ஆய்வின் பிரதான நோக்கமாகும். ஆய்வு முறையியல்களாக செயற்கை நுண்ணறிவை அறிமுகம் செய்ய வரலாற்று ஆதார முறையும், செயற்கை நுண்ணறிவினால் மானுட அறிவின் எதிர்கால நிலையை அறிய உய்த்தறிவு முறையும், செயற்கை நுண்ணறிவு, மனித சிந்தனைகள் பற்றிய விடயங்களை இணைத்துப் பார்க்க தொகுத்தறிவு முறையும், செயற்கை நுண்ணறிவின் அதிகரித்த பயன்பாட்டால் எதிர்காலத்தில் மனித சிந்தனை, புத்தாக்கத் திறனின் நிலையை அறிய ஆழ்நிலையுணர் முறையும் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வில் “Antiqua et Nova” என்ற திரு அவையின் ஏடானது பிரதானமாக மனித அறிவின் தனித்துவம் பற்றி இறையியல், மெய்யியல் அடிப்படையிலான விடயங்களை உயத்துணர பயன்படுத்தப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு அடைந்திருக்கும் மற்றும் இன்னும் முன்னேறி வரும் மயக்கம் தரும் உயரங்கள், கடவுளின் சாயலிலும் மனித சாயலிலும் உருவாக்கப்பட்ட மனித இனத்தின் மதிப்புக்கு ஒரு புகழ்பெற்ற சான்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது இயற்கை நுண்ணறிவின் ஒரு விளைபொருளாகும். முதல் மூன்று அறிவுகளையும் உள்ளடக்கியதான நான்காம் அறிவு வகையாக செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் பரிணமிக்கக்கூடிய நிலை காணப்படுகின்றது என்பது சமகால நிகழ்வுகள் மூலமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அறிவியலும் விஞ்ஞான ஆராய்ச்சியும் வற்றாதது போலவே, அறிவியலின் ஒரு பகுதியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவானது எதிர்காலத்தில் முன்னோக்கிப் பயணத்தைத் தொடரும் என்பது உறுதியானது, மனித இனங்கள் குறைத்து மதிப்பிடப்படாத மற்றும் முற்றிலும் மாற்றப்படாத ஒரு புதிய உலக ஒழுங்கை உருவாக்குகிறது. மானுடவியல் வரலாற்றில் சாதாரண அறிவு, விஞ்ஞான அறிவு, மெய்யியல் அறிவு என்பவற்றைத் தொடர்ந்து இன்று செயற்கை நுண்ணறிவு மானுட வாழ்வியலோடு ஒன்றித்துக் காணப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவானது இம் மூன்று அறிவுகளையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றது. எனவே, மானுட அறிவு வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு நான்காம் அறிவாகப் பரிணமிக்கக் கூடிய நிலையை வெளிக்கொணரும் வகையில் ஆய்வானது கிறிஸ்தவ மானுடவியல் பார்வையில் அமைந்துள்ளது.