| dc.description.abstract |
21ஆம் நூற்றாண்டில் உலகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார நகர்வுகளில் இணையம் மற்றும் தகவல் தொழிநுட்ப சாதனங்களின் வகிபாகமானது இன்றியமையாதுள்ள நிலமையில் சர்வதேச கொவிட்-19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள முடக்க நிலையும் இதன் தேவையை அதிகரித்திருக்கின்றமையானது இலங்கைக்கும் ஏற்புடையதே. இதனடிப்படையில், இவ்வாய்வானது இலங்கையில் இணையம் மற்றும் மின்னஞ்சல் பாவனையின் நிலைமையை ஆய்வு செய்வதோடு கணினியறிவு மற்றும் டிஜிட்டல் அறிவின் நிலைமையை கணித்தல், கணினியை சொந்தமாக கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கையை அடையாளம் காணுதல், தொலைபேசி மற்றும் சமூக ஊடக பாவனையையும் இணைய சேவையினை பெற்றுக்கொள்ளும் முறைகளையும் அடையாளம் காணுதல் மற்றும் இணையம் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப பாவனையினால் ஏற்பட்டுள்ள தாக்கங்களை அடையாளங்காணுதல் போன்ற உப இலக்குகளினையும் ஆய்வு செய்கின்றது. இவ்வாய்விற்காக, முதலாம் நிலைத்தரவுகளாக நிகழ்நிலை வினாக்கொத்து மற்றும் Zoom செயலியினூடான நேர்காணல்கள் மூலமும் பல்வேறு தரப்பினரிடமிருந்து தரவுகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதோடு பல்வேறு அறிக்கைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் ஆய்வு கட்டுரைகளிலிருந்து இரண்டாம் நிலைத்தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளன.
விபரணப்பகுப்பாய்வு அணுகுமுறையின் அடிப்படையில் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதோடு இதற்காக SPSS (Version 25) மென்பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வின் படி இலங்கையில், 2006/07-2020 ஆண்டு காலப்பகுதியில் சராசரியாக கணினியறிவு 26.30% (நியமவிலகல் 5.16188), டிஜிட்டல் அறிவு 42.48% (நியமவிலகல் 6.1536), இணையத்தள 26.44% (நியமவிலகல் 7.4366) மற்றும் மின்னஞ்சல் 12.74% (நியமவிலகல் 2.4755) பாவனையும் மற்றும் கணினியை சொந்தமாக கொண்ட வீட்டு அலகுகளின் எண்ணிக்கை
22.18% (நியமவிலகல் 0.4382) ஆகவும் காணப்படுகின்றன. மடிக்கணினி வகைகளில் HP மற்றும் DELL போன்றனவும் சமூக ஊடகங்களில் முகநூல் 39.2% மற்றும் Whatsapp 95.8%, தொலைபேசி வகைகளில் Samsung (53.6%), Huawei (17.7%), Vivo (9.9%), Oppo (9.4%) போன்றனவும் அதிகளவாக பயன்படுத்தப்படுகின்றன. கையடக்க தொலைபேசியின் மூலம் 77.7% இணையச்சேவையை பெற்றுக்கொள்வதோடு இதற்காக Dialog 70.8%, Airtel 15.9%, Mobitel 23.1%, Hutch 6.7% போன்ற SIM வகைகளினை பயன்படுத்துகின்றனர். SLT Broadband 5.7%, Dialog
Broadband 19.7% மூலமும் இணையச்சேவையை பெற்றுக்கொள்கின்றனர். இலத்திரனியல் பயன்பாட்டினால் 2020ஆம் ஆண்டு மாதாந்தம் 1000 மேற்பட்ட முறைபாடுகள் CERT நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் இலத்திரனியல் மயமாக்கத்தின் நகர்வானது கடந்த காலங்களில் மிகவும் பின்னடைவில் காணப்படுகின்றதோடு கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற துறைகளை நிகழ்நிலைக்கு மாற்றமுற்படும் போது பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் அதன் வெற்றியின் தன்மையினையும் வீழ்ச்சியடையச் செய்கின்றன. எனவே, அரசாங்கம் நிலைபேண்தகு முறைமையில் நிலையான செயற்திட்டங்களோடு தகவல் தொடர்பாடல் துறையினை விருத்திசெய்ய வேண்டும். இதற்கான முதலீடுகளினையும் உட்கட்டமைப்பு வசதிகளினையும் கிராமிய மற்றும் தோட்டப்புறங்களில் பெருவாரியாக விருத்தி செய்யவேண்டும். இவ்வாறு முயற்சிகளினை மேற்கொள்வதானது கொவிட்-19 போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில் ஏற்படும் சவால்களினை வெற்றிகொள்ள முடிவதோடு இலங்கையின் எதிர்கால தலைமுறையினரை செயற்கை நுண்ணறிவு உலகினை நோக்கி நகர்த்துவதற்கு வழிசமைப்பதாய் அமையும். |
en_US |