| dc.description.abstract |
பல வழிகளிலும் வளர்ச்சி காணும் உலகில் மிக முக்கியமான ஒரு விடயம் எதிர்பார்த்த அளவு அல்லது வேண்டிய அளவு வளர்ச்சி காணவில்லை அது மனிதநேயப் பண்பாடு ஆகும். காலவோட்டத்தில் இயந்திரமாக இயங்கும் மனிதர்களிடையே அருகிப் போயிருக்கின்ற மனிதநேயப் பண்பாட்டை அழுத்திக் கூறுவதும் காலாதிகாலமாக சொல்வடிவில் இருந்து வரக்கூடிய மனிதநேயப் பண்பாட்டை புதியதோர் பண்பாட்டை நோக்கி சுட்டுவதும் இவ்வாய்வின் நோக்கமாகும். புதியதோர் கிறிஸ்தவ மனிதநேயப் பண்பாட்டை நோக்கி என்ற மையக்கருத்தின் அடிப்படையில் "மதநல்லிணக்கத்துக்கு அடித்தளமாகும் மனித நேயப்பண்பாடு: தாயுமானவர் சுவாமிகளின் படைப்புக்கள் ஊடான பார்வை" என்றவாறு இந்த ஆய்வு அமைகிறது. அவ்வகையில் இன்றும் கூட வாழும் மதங்கள் உள்ளிட்ட ஏனைய, பண்டைய மதங்கள் தனித்தனி திசையில் மனிதர்களுக்கு வழிகாட்டி நிற்கின்றன. இன்றைய மனித வாழ்வியலில் இது ஏற்படுத்தும் விளைவு மதநல்லிணக்கத்தை சிந்திக்க தூண்டுகிறது. அறிவு கூர்மையாக்கப்படுகின்ற இக்காலத்தில் சமய உணர்வும் கூர்மையாக்கப்பட வேண்டும். இதனால் சமயங்களில் அடிநாதமான மனிதநேயப் பண்பாடு கோட்பாட்டு நிலையைக் கடந்து செயல் வடிவம் பெறவேண்டும். தொல்காப்பியம், சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, அகநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, சங்கம் மருவிய கால இலக்கியங்களான மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய பண்டைத்தமிழ் இலக்கியங்கள் அக்காலத்திலேயே சமயம், சமயப்பண்பாடு. இறைவழிபாட்டுத் தன்மை, இயற்கையை வழிபடும் நிலை என்பவற்றை வெளிப்படுத்தி உள்ளன. இதுபோல மேற்குலக மற்றும் கீழைத்தேச அறிஞர்கள் பலரும் மதம், சமயம் என்பன பற்றி விளக்கி இவற்றிற்கு இடையேயான வேறுபாடுகளையும் குறிப்பிட்டு உள்ளனர். சொற்பதங்களின் பொருளுக்கு அப்பால் காலப்போக்கில் பக்குவம் இன்மை கொண்ட சில பின்பற்றாளர்கள், தவறான அர்த்தப்படுத்தல்களினால் பகை முரண்பாடுகள் மதங்களுக்கிடையே உருவாகின. இதனால் மனிதனை உய்விக்க தோன்றிய மதங்கள் இடையே முரண்பாடுகள் வலுத்தன. இதனை உணர்ந்த உலகம் மத நல்லிணக்கத்தை வேண்டிநின்றது. உருவம், பெயர், மொழி, இனம் போன்ற தனிக்கூறுகள் கடந்த ஒத்த பண்புகளில் சந்திப்பதாகிய மதநல்லிணக்கக் கூறுகள் எல்லா மதங்களிலும் உள்ளன. மன்னித்தல், பொறுமை, சகோதரத்துவம், தியாக மனப்பாங்கு என மதங்கள் கூறும் நல்லுணர்வுகளை வெளிக்கொண்டு வந்தால் மதநல்லிணக்கம் கைகூடும். சகல மதங்களிலும் சமயப்பொருண்மை இலக்கியங்கள் ஊடாகவே பிரதானமாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. அவ்வகையில்
இந்து சமயத்தின்கண் தோன்றிய சமயவாதிகளில் ஒருவரான தாயுமானவர் சுவாமிகளின் பாடல்கள் மேற்குறித்த உருவம்,பெயர்,மொழி,இனம் போன்ற தனிக்கூறுகள் கடந்த ஒத்த பண்புகளைக் கொண்டு மதநல்லிணக்கத்திற்கு அடிப்படை ஆகின்ற மனிதநேயத்தை வலியுறுத்தி இருத்தல் காணலாம். அன்புசெலுத்துதல், மற்றவர்களுக்காக பிரார்த்தித்தல் தொடக்கம் மனங்கடந்த நிலைவரை தாயுமானவர் குறிப்பிடும் விடயங்கள் மகச்சிறந்த மதநல்லிணக்க அடிப்படைகள். எம்மதத்திலும் ஏற்றுக்கொள்ளுமாறான மனிதநேயப் பண்பாடு இவர் பாடல்களில் அதிகமாக உள்ளன. எனக்கு அல்ல எமக்கு என்று இன்று காணும் தத்துவத்தை அன்றைக்கே பாடியவர் தாயுமானர் சுவாமிகள். அனைவருக்குமான பிரார்த்தனை என்பது அதுவே. பல முகங்கள் கொண்ட அன்புடமையில் ஒருமுகம் கொல்லாமை இன்னொரு முகம் எல்லாவற்றிலும் இறைவனைக் காணுதல். இவ்விடயங்களில் தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள் சிறந்த மனப்பதிவை உண்டாக்குவனவாக காணப்படுகின்றன. பரிபூரண ஆனந்தம், பராபரம்,பரஞ்சோதி முதலிய மனித உணர்வை வெல்லுகின்ற சொற்பிரயோகங்கள் ஊடாக மன நெகிழ்ச்சி, மனப்பக்குவம் உண்டாகத் தக்க முறையில் இவர் பாடிய பாடல்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எம்மதத்திற்குரியது என்று விடைகாண முடியாத திருக்குறள் வலியுறுத்துகின்ற கருத்துக்கள், சைவத்தின் தமிழ் ஆகமமாக விளங்கும் திருமந்திரம் குறிப்பிடும் கருத்துக்கள் தாயுமானவர் சுவாமிகள் பாடலில் வெளிப்படுகின்றமையைக் காணலாம். ஆனால் பல்லவர்கால சைவத்திருமுறைகள், திவ்வியப்பிரபந்த பாக்கள் முதலியவற்றின் வெளிப்படையான தாக்கங்கள் சொல்லும் அளவிற்கு இல்லை. திருமுறைகளும், திவ்வியப்பிரபந்தமும் உருவம்,நாமம், வரலாறு, அருமை பெருமை பற்றி அதிகம் பேசின. இவ்விடத்தில் மத நல்லிணக்கம் எனவரும்போது தாயுமானவர் சுவாமிகள் படைப்புக்கள் தனித்துவம் பெறுதல் வெளிப்படையாகத் தெரிகிறது. அவர் பாடல்களில் வரும் கருத்துக்களை திருவிவிலியம், திருக்குரரான் ஆகியநுர்ல்களிலும் காணமுடியும் அவ்வகையில் தாயுமானவர் சுவாமிகளின் படைப்புக்கள் மதநல்லிணக்கத்திற்கு அடித்தளமாகுவதில் காத்திரமான பங்கைப் பெறுகிறது என்பது தெளிவு. |
en_US |