Abstract:
இலங்கையில் பிரித்தானியரது காலப்பகுதியில் மறைப்பணியாளர்கள் பல்வேறு
சமூகப்பணிகளை முன்னெடுத்து வந்துள்ளனர். இவர்களது ஆட்சிக்காலத்தில்
இலங்கையில் பிரகடனம் செய்யப்பட்ட மதச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி இங்கிலாந்து,
பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பல மறைப்பணியாளர் சபைகள்
இலங்கைக்கு வருகை தந்தன. இவர்களது பிரதான பணிகளிலொன்று சமயப்
பரப்புகையாகும். காலப்போக்கில் இவ்வாறு வருகைதந்த மறைப்பணியாளர்கள் சமூக
மேம்பாட்டின் பொருட்டு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு சமூக நலச்சேவைகளை
வழங்கியதோடு அவற்றின் மூலமாக படிப்படியாக கிறிஸ்தவ சமயத்தையும் பல்வேறு
கோணங்களில் பரப்பினார்கள். கிழக்கிலங்கையில் குறிப்பாக மட்டக்களப்பில்
படிப்படியாக தமது செல்வாக்கினை எற்படுத்திய மறைப்பணியாளர்களில் இயேசு
சபையினைச் சேர்ந்தவர்கள் பிரதான இடத்தைப் பெறுகின்றனர். பிரான்ஸ்சில்
இருந்தும், அமெரிக்காவில் இருந்தும் வருகை தந்த இயேசு சபைப் மறைப்பணியாளர்கள்
பல்வேறு சமூகப்பணிகளை முன்னெடுத்தனர். இவர்களால் முன்னெடுக்கப்பட்ட
சமூகப்பணிகள் மட்டக்களப்பில் மிகவும் பரந்துபட்டதாகவும் மக்கள் மத்தியில்
பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியதாகவும் காணப்பட்டது. பிரித்தானியரது ஆட்சியில்
இயேசு சபை மறைப்பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த குறித்த சமூகப்
பணிகள் பாரம்பரிய சமூகக் கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் மற்றும்
அதன் மூலமாக அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம், பண்பாட்டுத்துறைகளில்
ஏற்படுத்திய தாக்கங்கள் பெருமளவிற்கு இதுவரை அடையாளப்படுத்தப்படாமையினால்
அதனை அடையாளப்படுத்த வேண்டிய தேவையுள்ளமையை பிரதான நோக்கமாகக்
கொண்டு இலக்கியங்கள், நேரடியான கள ஆய்வுகள், அரச ஆவணங்கள்
என்பவற்றின் உதவியூடாக வரலாற்று உண்மைகளை வெளிப்படுத்துவதாக இவ்வாய்வு
கட்டமைக்கப்படுகின்றது. மட்டக்களப்பில் இயேசு சபை மறைப்பணியாளர்களின்
சமூகப் பணிகள் அங்கே பல்வேறு சமூக நலன்புரி, விழிப்புணர்வு நடவடிக்கைகளை
ஏற்படுத்தியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இயேசுசபை மறைப்பணியாளர்களின்
சமூகப் பணிகளை வெளிக்கொணர்வதோடு அதனூடாக சமூக, பண்பாட்டுத்
துறைகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களை எடுத்துக்காட்டுதல், இவர்களின்
சமூகப்பணிகள் பிறசமயங்கள் மீது ஏற்படுத்திய செல்வாக்கினை இனங்காணுதல்
மற்றும் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் எதிர்கொண்ட சவால்களை
அடையாளப்படுத்துதல் போன்றவை இவ்வாய்வின் ஏனைய நோக்கங்களாகும்.
நேரடியான கள ஆய்வுகள், நேர்காணல்கள், பெறப்பட்ட ஆய்வுடன் தொடர்புடைய
தரவுகள், மறைப்பணியாளர்களின் ஆய்வு வெளியீடுகள், அரசாங்கத்தின் ஆவணங்கள்
போன்ற தரவுகளை ஒப்பு நோக்கி உண்மைகளைக் கண்டறிந்து வரலாற்று
அணுகுமுறையின் அடிப்படையில் குறித்த ஆய்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இயேசுசபை மறைப்பணியாளர்கள் சமூகப் பணிகளை திறம்பட வழங்கியதோடு
அல்லாமல் அவற்றின் மூலமாக மட்டக்களப்பு பிரதேசத்தின் அரசியல், பொருளாதார,
சமூக, பண்பாட்டுத் துறைகளில் பல்வேறு தாக்கங்களையும் ஏற்படுத்தி இருந்தனர்.
அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி செயற்பாடுகளின் ஊடாக
கிழக்கிலங்கைச் சமூகம் பெற்றுக்கொண்ட பயன்களை கண்டறிதல் என்ற ஆய்வு
முடிவிற்கு வரமுடிகின்றது. காலத்தின் தேவையறிந்து மேற்கொள்ளப்பட்ட இவர்களின்
சமூகப் பணிகள் மட்டக்களப்பின் வரலாற்றுப்பாதையில் புதிய மாற்றத்தை
ஏற்படுத்தியதோடு பிற்கால வளர்ச்சிக்கும் ஒரு மைல்கல்லாய் அமைந்துள்ளது.