| dc.description.abstract |
இறைமக்கள் திருக்கூட்டமே திரு அவை என்று 2ம் வத்திக்கான் சங்கம்
கூறுகிறது. இறையாட்சிக்காக தம்மை அர்ப்பணிக்கும் மக்களின் தோழமை இயக்கமே
திரு அவை. ஆகையால் திரு அவையிலுள்ள எல்லோரும் சமம் என்பதை வலியுறுத்த
எழுந்துள்ள திரு அவையின் புதிய வடிவங்கள் அன்பியங்களாகும். அன்பியம் என்பது
தொடக்கக் திரு அவையின் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கப் படிப்படியாக நம்மை
வளர்த்தெடுக்கும் கருவியாகும். அன்பியம் என்பது ஒரு குழு அல்ல மாறாக பரந்த
குடும்பம். இக்குடும்பத்தில் அனைவரும் ஒரே மனமும் ஒரே நோக்கமும் கொண்டு
வாழ அழைப்பு விடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் யாழ் மறைமாவட்டத்தின்
இளவாலை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள மாரீசன்கூடல் திரு அவையில் மக்கள்
மத்தியில் அன்பிய வாழ்வு, எவ்வாறு அமைந்துள்ளது என்றும் நம்பிக்கை
கொண்டோரின் வாழ்க்கை முறை என்று சொல்லப்படுகின்ற தொடக்கக் திரு
அவையின் வாழ்கைமுறை இப்பங்குச் சமூகத்தில் எப்படி பிரதிபலிக்கின்றது என்றும்
அறிய உய்த்துணர் முறையியலையும், தொகுத்தறி முறையியலையும் கொண்ட
ஆய்வாக இது அமைந்துள்ளது. அதிகமாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களை கொண்ட,
பல பாரம்பரியங்களை தன்னகத்தே கொண்டு வாழ்கின்ற பங்குத் திரு அவையாக
மாரிசன்கூடல் திகழ்கின்றது. பல இக்கட்டான தருணங்களிலும், நாட்டின் பிரச்சனையான
காலப்பகுதிகளிலும் ஒருவரோடு ஒருவர் இணைந்து, உதவி புரிந்து வாழ்ந்த
சமூகமாகக் காணப்பட்டது. பொதுவாக இவர்களின் அயல் குடும்பங்கள் உறவுகளாக
அதிகம் இருக்கின்ற சமூகமாகவும், பலர் வெளியூர்களிலிருந்து வந்து
குடியேறியவர்களாக வாழ்ந்து வருகின்ற சமூகமாக காணப்படுகின்றனர். தற்பொழுது
இவர்கள் அன்பற்ற, விட்டுக்கொடுப்பற்ற சமூகமாக தோற்றம் பெற்றுள்ளனர். சாதிய
முறையிலும், பல வாழ்க்கை முறை பிறழ்வுகள் காணப்படுவதால் ஒரு அன்புத் திரு
அவையாக நடைமுறையில் காணப்படுவதில்லை. இப்படியான தன்மைகளை கொண்ட பிரச்சினைகள் உள்ள கத்தோலிக்க சமூகமாக இவர்கள் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் இருக்கும் இத்திரு அவையினை நம் ஆதிக்கிறிஸ்தவர்கள் வாழ்ந்த
வாழ்வின் நெறிமுறையில் ஒரு அன்பிய குழுமமாக மாற்றுவதே இவ் ஆய்வின்
நோக்கமாகும். இங்குள்ள சூழ்நிலையில் திரு அவையின் அன்பிய வாழ்வுக்கு எதிரான
சவால்களை முறியடித்து, அதிலிருந்து அவர்களை விடுவித்து பலரை நம்பிக்கையின்
வாழ்வுக்கு அன்பியங்கள் வழியாக அழைத்துச் செல்லவும், இப் பங்கில் உள்ள
பிரச்சினையை அன்பியங்களின் வழியாக இணைத்து, இத் திரு அவையை அன்பின்
குடும்பமாக, ஆதிக்கிறிஸ்தவ வாழ்க்கை முறையின் பண்புகளோடு ஒன்றுபட்ட ஒரே
சமூகமாக உருவாக்குவதே இவ் ஆய்வின் சிறப்பு நோக்கமாகும். இறையன்பு
மனிதனில் நிறை பயன் அளிக்கவே இயேசு “நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது
போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும்” என அழைப்பு
விடுத்திருக்கின்றார். திரு அவை இக்கால கட்டத்தில் இச்சமூகத்திற்கு அன்பிய
வாழ்வு வழியாக விடுக்கும் சவால் யாதேனில் நாம் அன்பு செய்ய கடவுளைச்
சந்திக்கின்ற இடங்களாக அன்பியங்கள் திகழ வேண்டும் என்பதாகும். |
en_US |