Abstract:
இளமை என்பது இறைவன் தந்த உன்னத கொடை இயற்கை தந்த வரம்.
அன்பு கனியும் இனிய பருவம். சமகாலத்தில் நவநாகரிக, பொருளாதார, கலாசார,
ஆடம்பரமான போட்டி நிறைந்த வாழ்வில் தம்மைத் தாமே மாற்றியமைத்துக்கொண்டு
இளமைப் பருவத்தினை அர்த்தமுள்ள முறையில் வாழாது கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு
முரணாக செயற்படும் நிலை காணப்படுகின்றது. இளையோரிடையில் காணப்படும்
ஒழுக்க விழுமியங்கள் குன்றிப்போதல், அவற்றில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள்
கண்டறிவதே ஆய்வு பிரச்சினையாக அமையப்பெற்றுள்ளது. இதற்கேற்ப சமகால
இளையோர்கள் கிறிஸ்தவ வாழ்வில் எதிர்கொள்ளும் சவால்களை அறிந்து
அவர்களது கிறிஸ்தவ வாழ்வின் முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நீதிமொழிகள்
நூலில் இருந்து கண்டறிவது இந்த ஆய்வின் பிரதான நோக்கமாக அமைகிறது.
இந்த வகையில் இளவாலை மறைக்கோட்ட பங்குகளில் உள்ள பல இளையோர்கள்
வாழ்வில் இறைநம்பிக்கையானது மிகப்பெரிய வீழ்ச்சியை நோக்கிச் சென்று
கொண்டிருக்கின்றது. இத்தகைய நிலையில் கிறிஸ்தவ வாழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை இனங்கண்டு அவர்களது வாழ்வின் முன்னேற்றத்திற்கான
வழிமுறைகளை அறிந்து கொள்வதற்கும் வழிவகைகளைக் கண்டடைவதை
நோக்காகக் கொண்டும் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. நீதிமொழிகள் நூல்
முன்வைக்கும் இளையோர் ஆளுமைப் பண்புகளை கருத்தில் கொண்டு சமகாலத்தில்
இளவாலை மறைக்கோட்ட இளையோர்களது வாழ்வினை மையப்படுத்தியதாக
தொகுத்தறிவு முறை, உய்த்தறி முறை ஆகிய ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
முதல்நிலைத் தரவுகளைப்பெற வினாக்கொத்து, நேர்காணல் போன்றவையும்,
இரண்டாம் நிலை தரவுகளைப்பெற சஞ்சிகைகள், நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள்
போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இளமை பற்றிய ஆழமான கருத்தியல்களை
விளங்கிக்கொள்வதும் அவற்றின் நேர்மனப்பாங்கு, எதிர்மனப்பாங்குத் தன்மைகளை
அறிந்து திரு அவையின் கருத்துக்களை இறைமதிப்பீடுகளுக்கு ஏற்ப
தெளிவுபடுத்துவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. மேலும் நீதிமொழிகள்
வெளிப்படுத்தும் இளையோர் ஆளுமைப் பண்புகளை தன்னகத்தே கொண்டு
இளவாலை மறைக்கோட்டத்தில் உள்ள பதினான்கு பங்குகளை ஆய்வுக்கு
உட்படுத்திய வேளையில் குறிப்பிட்டளவு இளையோர் கிறிஸ்தவ வாழ்விற்கு
ஏற்புடையவர்களாகவும், பெரும்பாலான இளையோர் நெறிபிறழ்வான வாழ்க்கையினை
வாழ்பவர்களாகவும் இருப்பதை அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.
இளைஞர்களிடையே புதுவாழ்வினையும் ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் எத்தகைய
முறையில் உள்ளன என்பதையும் அவைசார்பான புரிதல்களை திரு அவை
முன்னெடுக்கக்கூடிய யதார்த்த முறைகளையும் கண்டுணர்ந்து அவர்களை உரிய
முறையில் வழிப்படுத்தவும், இளம் சமூகம் தமக்கு ஏற்படுகின்ற பல்வேறுபட்ட
சவால்களை அறிந்து அவற்றில் இருந்து தமது வாழ்க்கையினை உலகியல்
மாயைகளுக்குள் சீரழிக்காது இறையரசியின் பாதையில் பயணித்து புனிதம் நிறைந்த
மனிதர்களாக வாழ வழியமைப்பது இந்த ஆய்வின் பயனாக அமைகிறது.