| dc.description.abstract |
பண்பாடென்பது ஒரு மக்கள் குழுமத்தின் வாழ்க்கை முறையைச் சுட்டிக்காட்டி
அவர்களின் தனித்துவமான வாழ்வியலை அவர்களுக்குரிய நிலத்துடன் இணைத்து
உருக்கொடுத்து வளர்ப்பதோடு அவர்களைத் தனிநபராகவும் குழுமமாகவும் சிந்தனை,
சொல், செயல், வடிவங்களிற் கட்டுப்படுத்தக்கூடிய, ஒட்டுமொத்த மதிப்பீடுகள்,
கருத்தியல்கள், நம்பிக்கைகள், என்பவற்றின் வெளிப்பாடு என அழைக்கப்படும்.
கிறிஸ்தவம் ஒரு பண்பாட்டிற்குள் மட்டும் தன்னை முடக்கிக்கொள்ளவில்லை.
எல்லாப் பண்பாட்டின் நன்மையான அம்சங்களையும் கிறிஸ்தவம் ஏற்று அரவணைத்துக்
கொண்டது. கிறிஸ்தவ நாகரிகம் யூத நாகரிகத்தில் தோன்றி பிற்பட்ட காலத்தில்
கிரேக்கம், உரோம் முதலான மேலைத்தேய நாகரிகங்களின் சிறப்பம்சங்கள்
பலவற்றையும் உள்வாங்கி வளர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய
தனித்துவம் மிக்க கிறிஸ்தவ சமயம் தான் பரம்பலடைந்த கீழைத்தேய ஆசிய
நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் செல்வாக்குப் பெற்றதுடன் 1962இல் இடம்பெற்ற
இரண்டாம் வத்திக்கான் சங்கக் கூட்டத் தொடரைத் தொடர்ந்து பண்பாட்டுமயமாக்கலின்
காரணமாகப் புதிய பண்பாட்டம்சங்களை உள்வாங்கிக்கொண்டுள்ளது. ஒரு நாட்டில்
பல்லினக் குழுவினரோ அல்லது வேற்றினக் குழுவினரோ வாழுகின்ற போது, ஒரு
இனத்தவரின் பண்பாட்டுக் கூறுகள் பிற இனத்தவரின் பண்பாடுக் கூறுகளில் தாக்கம்
செலுத்தும். ஆகவே இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்கும் அதிகமான தொன்மை
வாய்ந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டதான தமிழ்ப் பண்பாட்டின் தாக்கம்,
கிறிஸ்தவத்திலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஆசிய
நாடாகிய இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற வடபகுதியில் குறிப்பாக
யாழ்ப்பாணக் கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் இரண்டறக் கலந்துள்ள தனித்துவம் மிக்க
தமிழ்ப் பண்பாட்டின் ஊடாட்டத்தை இனங்காண்பது இந்த ஆய்வின் நோக்கமாகும்.
எனவே அத்தகைய அம்சங்களை சிறப்பாக கிறிஸ்தவ சமய வழிபாட்டுச்சடங்குகள்,
பக்திமுயற்சிகள், திருவிழாக்கள் அதில் இடம்பெறும் நிகழ்வுகளான கொடியேற்றம், மங்கலகரமான முறையில் வரவேற்றல், ஆராத்தி எடுத்தல், மாலை அணிவித்தல்,
பவனி, காணிக்கைசெலுத்துதல், விருந்து பரிமாறல் போன்றவற்றுடன் திருமண
நிகழ்வுகள், புதுமனை புகுவிழா நிகழ்வு போன்றவற்றில் நிகழ்த்தப்படும் வெளி
அடையாள நிகழ்வுகளிலும் வெளிப்படுவதை அவதானிக்கலாம். இவ்வெளியடையாள
நிகழ்வுகளில் இடம்பெறும் விடயங்களை பகுப்பாய்வு செய்து அவற்றைத் ஒப்பிட்டு
நோக்கும் போது எவ்வளவு தூரம் கிறிஸ்தவ சமயப் பண்பாட்டுப் பாரம்பரியங்களுடன்
தமிழ்ப் பண்பாட்டம்சங்களும் ஒன்றிணைந்துள்ளன என்பதை தெளிவாகக் கண்டுணர
முடியும். அதன்மூலம் பன்மைச் சமூக அமைப்பில் வெவ்வேறு சமயங்கள் மத
நல்லிணக்கத்துடன் வாழ்கின்றன என்பதையும் மதிப்பீடு செய்து கொள்ள முடியும்.
ஒரு சமூகத்தில் ஒவ்வொருவரும் மற்றவர்களின் பண்பாடுகளை மதிக்கவும் பாராட்டவும்
பழகிக்கொள்ள வேண்டும். கிறிஸ்தவ சமயம் தமிழ் மொழியின் வளர்ச்சியில் பாரிய
முன்னேற்றகரமான பல தாக்கத்தை ஏற்படுத்தியது போலவே கிறிஸ்தவ சமயப்
பாரம்பரியத்தில் தமிழ்ப் பண்பாடும் செல்வாக்குற்றுத் துலங்கி திரு அவைக்குச்
செழுமை சேர்த்துள்ளது எனலாம். |
en_US |