| dc.description.abstract |
இறைவனின் படைப்பில் ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வு இல்லை. இரு பாலினருமே இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவர்கள். ஒருடலாக, இணையாகப் படைக்கப்பட்ட பெண்ணினம் தீட்டு உடையவளாக, மகப்பேறில்லாத மலடியாக, கணவனை இழந்த விதவையாக, அடங்கி நடக்கும் அடிமையாக, போகப் பொருளாக, இரண்டாம் தரக் குடி மகளாக பெண்ணினம் மாற்றப்பட்டது. இது ஆசிய நாடுகள் அனைத்திற்கும் பொருந்தும். சட்டங்களாலும், சம்பிரதாயங்களாலும் அடிமைப்பட்டு, வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்களை இயேசு இறைபணிக்கு அழைக்கின்றார். இயேசுவின் பணியில் பெண்களும் துணையாய் இருந்தார்கள். தனது பணியில் இயேசு பெண்களுக்கு உரிமையும் சிறப்பிடமும் வழங்கி அவர்களைச் சமுதாயத்தில் நிமிர்ந்து நிற்கச் செய்கிறார். பெண்களும் பாலின சமத்துவமும்: பொதுவெளியில் பெண்களோடு பேசுவதை அவமானமாகக் கருதிய யூதச் சமுதாயத்தில் பெண்களை மதித்து அவர்களோடு உரையாடியவர் இயேசு. பாவி என கருதப்பட்ட சமாரியப்பெண் (யோவா 4:5-42), சிலுவைப் பயணத்தில் இயேசுவின் பின்னே சென்ற பெண்கள் (லூக் 23:27- 32), தனது பிள்ளைக்காக பரிந்து பேசிய செபதேயுவின் மனைவி (மத் 20:20-23), மார்த்தா, மரியா (யோவா 11: 17-42) போன்றவர்களோடு பொது இடங்களில் பேசியது பெண்களும் ஓர் ஆளாக மதிக்கப்பெற்று, மாண்புடன் வாழ வேண்டும் என்பதற்காகவே. இளம்பெண் மரியாள், நாணி, கோணி கதவுக்குப் பின்னால் நின்று பேசுபவராக அல்லாமல், ஆதிக்க மனநிலை கொண்ட மனிதர்களின் அகந்தையை இயேசு சிதறடிப்பார் என்று கூறுவது பண்பாட்டுப் புரட்சியாகும். பெண்கள் எல்லோரும் பொய்யர்கள் என்று கருதப்பட்டு, பெண்கள் கூறும் சாட்சியத்தை மதிக்காத யூத சமுதாயத்தில் ‘என் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்” என்று தனது உயிர்ப்பின் நற்செய்தியை அறிவிக்கும் முதல் சாட்சியாகவும் சீடராகவும் இயேசு தேர்ந்தெடுத்தது மகதலா மரியாவைத்தான் (யோவா 20:11-18). பெண்கள் அரசியலில், பொருளாதாரத்தில், பாலின சமத்துவத்தில், பண்பாட்டில், கௌரவத்தில் இரண்டாம் நிலையினராக ஆசிய நாடுகளில் நடத்தப்படுவது யதார்த்த நிலை. இந்த அடிமைநிலை அல்லது பின்தங்கிய நிலையிலிருந்து பெண்கள் விடுதலை பெற அன்னை மரியாள் முன்மாதிரியாக விளங்குகின்றார். மரியாவின் புரட்சிப்பாடல் அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலையை (லூக். 1:51-53) எடுத்துரைக்கின்றது. அன்னை மரியாவைப் பற்றிய கண்ணோட்டத்தை மக்கள் மத்தியில் மாற்றி அமைக்க வேண்டும். இயேசு பாலின சமத்துவத்தை ஆதரிப்பவராகவே விளங்கினார். மறைக் கல்வி பெண்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில் பெண்களுக்கும் இயேசு போதித்தார். காணிக்கை செலுத்திய விதவைப் பெண்ணை முன்னுதாரணம் காட்டியவர். பெண்களுக்கு புதுமை செய்து குணமளித்தவர். ‘மாதே நானும் தீர்பிடேன்” என்று சமத்துவம் காட்டியவர். நண்பர்கள், சீடர்கள் வட்டத்துக்குள் பெண்களையும் சேர்த்தவர். தீட்டுக்கு எதிரானவர் என்று இயேசு பாலின சமத்துவத்தை தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டியவர். |
en_US |