dc.description.abstract |
ஆசியாவின் தொன்மையான அரச உருவாக்கமானது வரலாற்றுக் கதைகளுடன் தொடர்ப்புபடுத்தப்பட்டிருப்பது பொதுவானதொரு பண்பாக காணப்படுகின்றது. கௌண்டின்யர், விஐயன், அர்ச்சுனன் கதை மரபுகளுக்கிடையிலான ஒற்றுமைகளுடாக இப்பண்பினை காணமுடிகின்றது. ஆதிகால, இடைக்கால வரலாறு பற்றிய ஆய்வில் ஐதீகங்கள், இதிகாச மரபுகளை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் கதைகளுக்கு முக்கிய பங்குண்டு. இவற்றில் புனைகதைகள், மிகைப்படுத்தல்கள், இடைச்செருகல்களுடன் கூடிய வரலாற்றுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவை மக்களது வாழ்வியலிலும், பிரதேசம், இனம் பற்றிய வரலாற்று நம்பிக்கையிலும் இரண்டறக் கலந்து விடுவதால் அவற்றைத் தொட்டுணர முடியாத அம்சங்களாகப் பார்க்கப்படுகிறது. இதனால்தான் யுனஸ்கோ போன்ற நிறுவனங்கள் உலக நாடுகளில் காணப்படும் தொட்டுணர முடியாத மரபுரிமை அம்சங்களைக் கண்டறிந்து, ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருகின்றன. தமிழ் மக்களிடையே செல்வாக்கு பெற்றிருக்கின்ற உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி பற்றிய வரலாற்றுக் கதைகளை இலங்கை வரலாறு பற்றி எழுந்த ஏனைய வரலாற்றுக் கதைகளுடன் ஒப்பிட்டு தமிழ் அரசமரபின் தோற்றம் பற்றிய ஆய்வில் அக்கதையின் வகிபாகத்தை மதிப்பீடு செய்வதே இவ்வாய்வின் பிரதான நோக்கமாக அமைவதுடன், இன்னொரு நோக்கமாக உக்கிரசிங்கமன்னன், மாருதப்புரவீகவல்லி கதையில் வரும் வரலாற்றுச் சம்பவங்களினை தொல்லியல் ஆதாரங்களுடன் ஒப்பிட்டு கதையின் உண்மைத் தன்மையை மீளாய்வு செய்வதாகவும் அமைகின்றது. இவ்வாய்வு நோக்கங்களை நிறைவுசெய்வதன் பொருட்டு ஆய்வுடன் தொடர்புடைய வரலாற்றுக் கதைகளினை உள்ளடக்கியுள்ள மூலநூல்களிலிருந்தும், இம்மூலநூல்களினை அடிப்படையாகக் கொண்டெழுந்த இரண்டாம்தர நூல்களிருந்தும் தரவுகள் பெறப்பட்டிருப்பதுடன், இரண்டாம்தர தரவுகள் தொல்லியல் களப்பயணங்கள், நேரடி நேர்காணல் ஊடாகவும் சேகரிக்கப்பட்டுள்ளன. முதல்தர தரவுகள் இரண்டாம்தர தரவுகளுடன் ஒப்பிட்டு ஆராயப்பட்டு அதனை பகுப்பாய்வு செய்வதாகவே இவ்வாய்வு அமைகின்றது. வரலாற்று இலக்கியங்களில் காணப்படும் வரலாற்றுக் கதைகளில் நம்பமுடியாத வரலாற்றுச் செய்திகள் பல காணப்பட்டாலும் புராதன அரச உருவாக்கம், நாகரிக உருவாக்கம், புராதன வரலாற்று மையங்களை கண்டறிவதற்கு அவை துணையாக இருந்து வருவதற்குப் ஆதாரங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் வடக்கு, கிழக்கு இலங்கையில் ஏற்பட்ட தமிழ் அரசஉருவாக்கம், நாகரிக வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதில் உக்கிரசிங்க மன்னன் மாருதப்புரவீகவல்லி வரலாற்றுக்கதைகளுக்கும் முக்கிய பங்குண்டு. பேராசிரியர் இந்திரபாலா விஐயன் கதையின் அம்சங்களை இலங்கையின் பாளி, சிங்கள வரலாற்றேடுகளில் மட்டுமல்லாது இந்திய, சீனநூல்கள் சிலவற்றிலும், இலங்கைத் தமிழர் வரலாற்றுக்கதைகளில் ஒரு திரிந்த வடிவத்தில் காணப்படுவதாகவும், உக்கிரசிங்கன், மாருதப்புரவீகவல்லி கதை பெரும்பாலும் சிங்கள மக்களிடையே நிலவுகின்ற விஐயமன்னன் பற்றிய கதையை தழுவியதெனவும் குறிப்பிடுகின்றார். உக்கிரசிங்கமன்னன் மாருதப்புரவீகவல்லி கதை மகாவம்சம் என்ற பாளி இலக்கியத்தில் கூறப்படும் விஐயமன்னன் குவேனி கதையின் மாற்று வடிவமாகக் காணப்படுவதனை, விஐயமன்னன் கதையிலே வருகின்ற பாட்டனாகிய சிங்கமே தமிழிழக்கியங்களில் உக்கிரசிங்கனாகவும், பாட்டியாகிய கலிங்கநாட்டுத் தொடர்புடைய வங்கத்து இளவரசி மாருதப்புரவீகவல்லியாகவும், சிங்கத்திற்கும் இளவரசிக்கும் பிறந்த பிள்ளைகளான சிங்கபாகு, சீகவல்லியே உக்கிரசிங்கன் மாருதப்புரவீகவல்லியின் பிள்ளைகளான நரசிங்கராசன் சண்பகாவதியாகவும் உருமாற்றப்பட்டுள்ளதாக கருதமுடியும். இவ்ஐதீகங்கள் கிழக்கிலங்கையிலும் அப்பிரதேசத்திற்கு ஏற்றவாறு மாற்று வடிவம் பெற்றுள்ளதனையும் அவதானிக்கமுடிகின்றது. விஐயமன்னன் வரலாற்றுக்கதையினைப் போன்று உக்கிரசிங்கமன்னன் மாருதப்புரவீகவல்லி கதையும் தமிழர் பிரதேசங்களின் தொன்மையான வரலாற்றினைக் கூற பயன்படுத்தப்பட்டுள்ளதனை கதிரைமலை,
கீரிமலை, மாவிட்டபுரம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற புராதன நாகரிக உருவாக்கம், கதிரமலையை மையமாகக் கொண்ட அரசஉருவாக்கம் என்பன எடுத்துக்காட்டுகின்றன. ஏனைய இடங்களில் முறையான தொல்லியல் ஆய்வுகள் இடம்பெறாத போதும், கந்தரோடையின் தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகள் இதனை உறுதிப்படுத்த உதவுகின்றதெனலாம். |
en_US |