dc.description.abstract |
மனித வரலாற்றில் வண்டில் சக்கரத்தின் கண்டுபிடிப்பும், பயன்பாடும் நாகரிக வளர்ச்சியின் தொடக்க காலங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. தென்தமிழகத்திலும், இலங்கையிலும் இதன் பயன்பாடு இற்றைக்கு மூவாயிரம் ஆண்டிலிருந்து தோன்றிவளர்ந்த பெருங்கற்காலப் பண்பாட்டுடன் அறிமுகமாகியதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. இப்பண்பாட்டில் மாடுகள் உணவுக்காகவும், விவசாய உற்பத்திக்காகவும் பயன்படுத்தப்பட்டதை பெருங்கற்காலக் குடியிருப்பு மையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரங்கள், மாட்டின் எலும்புகள், நெல் உமியின் படிமங்கள், இரும்பிலான ஏரின் கொழுக்கள் முதலான சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன. வரலாற்றுத் தொடக்ககாலத்தில் இருந்து மாடுகள் விவசாயத்திற்கும் மக்களின் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்பட்டதை பழந்தமிழ் இலக்கியங்களில் வரும் மாடுகளுக்காகவும், மாட்டுவண்டிலில் பயணம் செய்யும் மக்களுக்காகவும் அமைக்கப்பட்ட ஆவுரஞ்சிக்கல், சுமைதாங்கி, கேணி, குளங்கள் முதலானவற்றின் வரலாற்றுக் குறிப்புகள் உறுதிசெய்கின்றன. வடஇலங்கையில் மோட்டார் வாகனங்களுக்கு முன்னர் மாட்டுவண்டிலே முக்கிய போக்குவரத்துச் சாதனமாகப் பயன்பட்டிலிருந்துள்ளது. அவை பயன்பாட்டின் தன்மை, நோக்கம் என்பதற்கு ஏற்ப பார வண்டில், இரட்டைத் திருக்கல் வண்டில், மொட்டை வண்டில், கூடார வண்டில், வில்லு வண்டில், ஒற்றைத் திருக்கல் வண்டில், சவாரி வண்டில், தண்டில் வண்டில், மண்ணெண்ணை வண்டில், மிசின் வண்டில், பிரேத வண்டில், ரயர் வண்டில் என பலபெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஆயினும் சமகாலத்தில் இப்போக்குவரத்து சாதனங்கள் பாவனையிலிருந்து மறைந்திருப்பதோடு, இன்னும் சிலவற்றை அடையாளம் காண முடிந்தாலும் அவை அருகிவரும் பண்பாட்டுச் சின்னங்களகாவுமேயுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் செல்வாக்கிழந்து, அருகிவரும் நிலையிலுள்ள மாட்டுவண்டில் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அம்சங்களினதும் வரலாற்றுத் தொல்லியல் தரவுகளை தொகுத்து ஆராய்வதும், அதனூடாக மாட்டு வண்டில் பற்றிய பண்பாட்டம்சங்களை ஆவணப்படுத்துவதனை முதன்மை நோக்கமாகக் கொண்டும், அவற்றின் தொடர்ச்சியான இருப்பையும், வடஇலங்கை தமிழர்களது வாழ்வியலில் மாட்டு வண்டில் பெற்றிருந்த முக்கியத்துவம், பண்பாட்டுத் தாக்கம் என்பவற்றை எடுத்து காட்டுவதாகவும் இவ்வாய்வு அமைகின்றது. இவ்வாய்வு நோக்கங்களை நிறைவு செய்வதன் பொருட்டு களவாய்வில் திரட்டிய முதலாம் நிலைத் தரவுகளோடு, மாட்டு வண்டில் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தொல்லியல் சான்றுகள், மாட்டு வண்டில் பற்றிய செய்திகள், சொற்பதங்கள் வரும் இலக்கியங்கள், தமிழ் அகராதிகள் போன்ற இரண்டாம் நிலைத் தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு வரலாற்றியல், சமூகப் பண்பாட்டியல் அணுகுமுறைகளின் படி பகுப்பாய்வு செய்யப்படும். வடஇலங்கை பொருளாதார சமூக அமைப்பில் மாட்டு வண்டில் பயன்பாடு முக்கியம் பெற்றிருந்து, இன்றைய நிலையில் அவற்றின் பயன்பாடானது அருகிவந்தாலும், சமய, சமூக, கலாசார ரீதியில் அதனுடைய தாக்கத்தினை இன்றுவரை காணக்கூடியதாகவுள்ளது. பண்டு தொட்டு மக்கள் வாழ்வியலில் மாட்டுவண்டில் ஏற்படுத்திய செல்வாக்கு காரணமாக இன்றும் கிராமிய பேச்சு வழக்கில் அவற்றுடன் தொடர்புடைய பழமொழிகள்,
சொற்றொடர்கள் பாவனையிலிருப்பதனை கண்டு கொள்ளமுடிகின்றது. மற்றும் மாட்டுவண்டில் சாவரி இன்றும் குறிப்பிட்ட பிரதேசங்களில் ஒரு பண்பாட்டு விழாவாக இடம்பெற்று வருவதனையும், தமிழர் திருநாளான தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் இடம்பெறும் பண்பாட்டு மரபு, பெருங்கற்கால குறியீட்டு மரபின் தொடர்ச்சி நிலையிலான அம்சமாக மாடுகளுக்கு குறியிடப்படும் முறைகளும், இன்றும் கிராமப்புறங்களில் மாடுகளுக்கு குளிப்பாட்டுவதற்கும், நீர் அருந்துவதற்காகவும் தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்டிருந்த குளங்களையும், மாட்டுத் தொழுவங்கள் மற்றும் குடில்கள் என்பவற்றை அடையாளப்படுத்த முடிவதும், சில குறிப்பிட்ட கலாசார நிகழ்வுகளில் மாட்டுவண்டில் உபயோகத்தினை காணமுடிவதும், மாட்டு வண்டில்களும், அதனுடன் தொடர்புடைய பொருட்களினையும் அரும்பொருட்களாக காட்சிப்படுத்துவதனையும், பேணிப்பாதுகாக்கின்ற முறையினை காணமுடிதல் போன்றவற்றினுடாக வடஇலங்கை சமூகத்தில் மாட்டுவண்டில் ஏற்படுத்திய பண்பாட்டுத் தாக்கத்தினையும், அதன் தொடர்ச்சியான தன்மையினையும் இன்றுவரை காணக்கூடியதாகவுள்ளது. |
en_US |