Abstract:
மக்களின் வாழ்வியல் அனுபவங்களுடன் ஒன்றிணைந்தவையே சமயமும் தத்துவமும். சமயம் தொடர்பான ஆய்வுகள் மானிடவியல் புலத்திற்கு தொன்மையானது. தொன்மை மக்களின் வாழ்வியல் கூறுகளுடன் ஒன்றியிருந்து சமயக் கருத்துக்களை பண்பாட்டுச் சார்புடைமை நிலையில் விவரித்தவர்கள் மானிடவியலாளர்கள். இந்தவகையில் தமிழர் பண்பாட்டு மரபில் சைவசித்தாந்தம் தொடர்பாக இவ்வாய்வு ஆய்வு செய்கின்றது.
மரபும், வழக்காறுகளும் பண்பாட்டின் அங்கங்களாகும். தமிழர் பண்பாட்டு மரபானது நீண்ட தொடர்ச்சித் தன்மை கொண்டது. நீண்ட நெடிய தமிழர் பண்பாட்டுத் தொடர்ச்சியில் சமயமும் அதனோடிணைந்த வாழ்வியலும் முதன்மை பெறுகின்றது. ஒவ்வொரு சமூக பண்பாட்டுத் மரபுகளும் அம் மக்களின் பாரம்பரியமான மரபார்ந்த அறிவுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. பண்பாடுகளில் நிலவும் 'தத்துவம் மரபு' என்பது பண்பாட்டின் மரபார்ந்த அறிவின் வெளிப்பாடாக அமைந்திடக் காணலாம். இந்நிலையில் தமிழர் பண்பாட்டு மரபில் சைவசித்தாந்த தத்துவ சிந்தனையின் வியாபகத் தன்மையினை இவ்வாய்வு மானிடவியல் நோக்கில் வெளிக்கொண்டு வருகிறது.