Abstract:
சமயத்தின் மானிடவியல் சார்ந்த இவ்வாய்வானது புனித ஹஜ் மற்றும் ஐயப்பன் யாத்திரைகளைத் தன் ஆய்வுப் பொருளாகக் கொண்டுள்ளது. பன்மைச் சமூகங்களுக்கிடையிலான புரிந்து கொள்ளலில் சமயங்களுக்கிடையிலான ஒருமைத்தன்மை அவற்றுக்கான அடிப்படை பற்றிய அறிவு அவசியமாகின்றது. இந்த அறிவின் தேடலே இவ் ஆய்வின் நோக்கமாகும். இந்த ஆய்வானது எதிர்காலப் பண்பாட்டிடை ஆய்வுகளுக்கு (Inter Cultural Studies) முன்னோடி ஆய்வாகவும் அமைகின்றது.
உலக சமயங்கள் பலவற்றுள் யாத்திரை என்பது ஒரு முக்கிய சமய நிகழ்வாக மக்களால் பின்பற்றப்பட்டுவருகின்றது. இந்தவகையில் சமயத்தின் மானிடவியலில் யாத்திரை பற்றிய கவனிப்பு முக்கியத்துவம் பெறுகின்றது. யாத்திரையை குறிப்பிட்ட பண்பாட்டினால் வரையறை செய்யப்பட்ட ஒரு எல்லையிலிருந்து மற்றொரு பண்பாட்டு எல்லைக்குள் சஞ்சரிக்கும் நிகழ்வு சார்ந்த ஒன்றாகவே மானிடவியலாளர்கள் நோக்குகின்றனர்.
புனித ஹஜ் யாத்திரை பொதுவாக உலகில் வாழும் இஸ்லாமிய மக்களினால் றம்ழான் மாதத்தில் நோன்பு ஆரம்பித்து தொடரும் வரும் துலஹஜ் மாதத்தில் சவுதி அரேபியாவிலுள்ள இஸ்லாமிய புனித நகரமான மக்கா நோக்கி மேற்கொள்ளப்படும் யாத்திரையாகும். ஐயப்பன் யாத்திரை உலகில் வாழும் இந்து மக்களால் வருடந்தோறும் கார்த்திகை மாதம் நோன்பு ஆரம்பித்து தொடரும் மார்கழி மாதத்தில் இந்தியாவிலுள்ள புனித சபரிமலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வரும் சமயம்சார்ந்த யாத்திரையாகும்.
முஸ்லிம் மக்களின் சமயவாழ்வில் இஸ்லாமிய சமயத்தின் தூண்கள் போன்ற ஐம்பெரும் கடமைகள் உள்ளன. அவற்றுள் ஐந்தாவது கடமையாக மக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்வது காணப்படுகின்றது.''உலகின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஒவ்வொரு ஆண்டிலும் வந்து கூடும் பல இனத்தார்கள், பல மொழியாளர்கள் வெகுதூரத்திலுள்ள அவர்களது வீடுகளிலிருந்து ஒவ்வொரு வேளையும் எந்த திசைகளை நோக்கித் தொழுவார்களோ அந்த புனிதமான இடத்திலே முஸ்லிம்கள் ஒன்று சேர வேண்டுமென்று இஸ்லாம் விதிக்கின்றது'' (இஸ்லாமின் போதனைகள்-Sir Thoms Anarld )
இந்துக்களது சமயவாழ்வில் நான்கு வகை ஆச்சிரமங்கள் மற்றும் புருடார்த்தங்களும் முக்கியமானவை. இந்துக்களின் சமயவாழ்வின் வழியே வந்த ஒரு சமயம் சார் சடங்காகவே சபரிமலை ஐயப்பன் யாத்திரை காணப்படுகின்றது. மனிதனுடைய உலகியல் வாழ்வில் துறவும் பிரமச்சரியமும் அவசியமானவை, அத்துடன் புலனடக்கத்தினை பயிற்றுவிக்கும் ஒரு சமயம்சார் நிகழ்வாகவும் ஜயப்பன் யாத்திரை காணப்படுகின்றது. இங்கும் சிறப்பானதும் தனித்துவமானதுமான விரதமுறை மற்றும் ஒழுங்குநெறிமுறைகள் காணப்படுகின்றன.
எதிர் - அமைப்பியல் கோட்பாடானது மனித இயல்பு நிலைக்கு அப்பாலுள்ள மீவியல்பு பற்றிய விடயங்களை பண்பாட்டியல் நோக்கில் விளக்குகின்றது. அந்தவகையில் புனித ஹஜ் மற்றும் ஜயப்பன் யாத்திரைகள எதிர்- அமைப்பியல் கோட்பாட்டின் வழி இவ்வாய்வானது பகுப்பாய்வு செய்கின்றது. இங்கு மீவியல்பு எனும் கருத்தாக்கத்தினடியாக ஒருவர் ஒரு நிலையிலிருந்து பிறிதொரு நிலைக்கு யாத்திரையின் வழியே நிலைமாற்றம் பெறுகின்ற படிமுறைகள் அனைத்து விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்தப்படுகின்றன.
இவ்வாறாக வேறுபடும் சமயப் பண்பாட்டு கோலங்களுக்குள் நிலவுகின்ற ஒருமைப்பாட்டு அம்சங்களையும், அவற்றுக்கான அடிப்படை மானிடவியல் தளங்களினையும் இவ்வாய்வு தெளிவுபடுத்துகின்றது.