Abstract:
இன்றைய காலகட்டத்தில் எத்துறைசார் அறிவும் விஞ்ஞானபூர்வமான அணுகு
முறையினையும் அறிவியற் கருத்துக்களின் செழுமையினையும் கொண்டமைய
வேண்டியது எதிர்பார்ப்புக்குரியது. இந்துநாகரிப்புலத்தில் அண்டவியல் வானியல்,
இயற்பியல், இரசாயனவியல், மருத்துவம் போன்ற முறைசார் அறிவியற்புலங்களும்
இரசவாதம், சோதிடம், குண்டலினியோகம், காயசித்தி உபாயங்கள் போன்ற முறைசாரா
அறிவியற் புலங்களும் காலாதிகாலமாகக் காத்திரமான வளர்ச்சியைப்பெற்று வந்துள்ளன.
அந்தவகையில் இந்துப் பண்பாட்டு வரலாற்றில் மருத்துவக்கலையின் மூலங்களை
அடையாளங்காண்பதும் அம்மூலங்களிலிருந்து மருத்துவஇயல் பற்றிய இந்து சமூகத்தினரின்
பாரம்பரிய சிந்தனைமரபைப் பற்றிய ஒருபரிமாணத்தைத் தரிசிக்க முயல்வதுமே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பிணியினைப் போக்குதல் ஆரோக்கியம் காத்தல் என்பதனுாடாக நீண்ட
ஆயுளைத்தரவல்ல முறைமையால் இந்துக்களுடைய மருத்துவக் கலையானது
ஆயுர்வேதம் என வழங்கப்பட்டது. பிற்காலத்தில் இது சித்தர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட
முறைமையால் சித்த மருத்துவம் என்ற பெயருடன் தென்னாட்டில் பிரபல்யம் பெற்றது.
வைதீகப்பாரம்பரியம் :
இருக்குவேதத்தில் இடம்பெற்றுள்ள ஓஷதிசூக்தம் இந்துக்களின் மருத்துவ சிந்தனை
மரபின் முக்கியமான ஆரம்ப நிலையாகும்... வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும்
திரிதாது என ரிக்வேதம் சுட்டியுள்ளதுடன் கட்புலன், செவிப்புலன் குறைபாடுகளை
நீக்கும் தேவ மருத்துவர்களாக அஸ்வினி குமாரர்களை அவ்வேதம் போற்றுகிறது.
சுக்கிலயசுர் வேதத்தில் குஷ்டம், இதயநோய், காசநோய், சித்தசுவாதீனம் ஆகிய
பிணிகள் அவற்றுக்கான குணங்குறிகளுடன் தெளிவாக அடையாளங்காணப்பட்டுள்ளன,
ஆயினும் இவற்றிற்கான சிகிச்சைகள் மருந்தளவிலன்றி மந்திர உச்சாடனங்களாகவே
குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்து மருத்துவ வரலாற்றில் அதர்வவேதம் தனித்துவமான வகிபங்கைப் பெற்றுள்ளது.
இதன் பேஷஜானிசூக்தானி, ஆயுஷ்யானிசூக்தானிப் பகுதிகள் மருத்துவ சிந்தனைகளை
அதிகம் உள்ளடக்கியுள்ளன. ஒரு முழுமையான மருத்துவசாஸ்திரத்துக்கே உரிய
பண்புகளோடு நோய் அறிகுறிகளை எடுத்துக்கூறி நோயைத் தெளிவாக அடையாளங்
காணுகின்ற அதர்வவேத்தின் சில பகுதிகள் வியக்கத்தக்கன.